திருச்சியில் 3-வது நாளாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம்; அரசியல் கட்சியினர் ஆதரவு


திருச்சியில் 3-வது நாளாக பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட்டம்; அரசியல் கட்சியினர் ஆதரவு
x
தினத்தந்தி 20 Feb 2019 11:00 PM GMT (Updated: 20 Feb 2019 9:18 PM GMT)

திருச்சியில் 3-வது நாளாக நடந்த பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் அரசியல் கட்சியினர் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர். சேவை பாதிப்பால் வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

திருச்சி,

பி.எஸ்.என்.எல்.-க்கு 4ஜி அலைக்கற்றை சேவையை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். 1.1.2017 முதல் ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் கடந்த 18-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி திருச்சி பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு பி.எஸ்.என்.எல். அகில இந்திய அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்க கூட்டமைப்பு தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் அஸ்லம்பாஷா, சஞ்சார்நிகாம் அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், அகில இந்திய பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் சசிக்குமார், தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஜவகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் திராவிடமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜா, மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினர்.

வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 3-வது நாளாக பெரும்பாலான பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள், தொலை தொடர்பு எக்சேஞ்ச் அலுவலகங்கள், வாடிக்கையாளர் சேவை மையம் ஆகியவை மூடியே இருந்தன. தொடர்ச்சியாக பராமரிக்க ஊழியர்கள் இல்லாததால் சேவை குறைபாடு ஏற்பட்டது. தரைவழி தொலைத்தொடர்பு சேவை மற்றும் மொபைல் உள்ளிட்ட நெட்வொர்க் சேவையும் பாதிக்கப்பட்டது. பல்வேறு வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் செயல்படாமல் இருந்தன. இதுபோன்ற சேவை குறைபாட்டால் வாடிக்கையாளர்கள் கடுமையாக அவதிப்பட்டனர். 

Next Story