பள்ளி தலைமையாசிரியரை மாற்றக்கோரி மாணவர்களை வகுப்புகளில் இருந்து அழைத்து வந்து பெற்றோர்கள் போராட்டம்


பள்ளி தலைமையாசிரியரை மாற்றக்கோரி மாணவர்களை வகுப்புகளில் இருந்து அழைத்து வந்து பெற்றோர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Feb 2019 10:45 PM GMT (Updated: 21 Feb 2019 3:31 PM GMT)

பனங்குளம் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையை மாற்றக்கோரி வகுப்பில் இருந்த மாணவர்களை வெளியே அழைத்து வந்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரியின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு மாணவர்களை வகுப்புகளுக்கு அனுப்பினார்கள்.

கீரமங்கலம்,

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த ஆண்டு வரை 20–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு 13 மாணவ, மாணவிகளே படிக்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு ஏற்றப்பட்ட தேசிய கொடி 2 நாட்களுக்கு மேலாக இறக்கப்படாமல் இரவு பகலாக பறந்ததால் பொதுமக்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தேசிய கொடி இறக்கப்பட்டது.

இந்தநிலையில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ள பள்ளி என்பதால் பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள், கிராம பொதுமக்கள் இணைந்து ஒரு தற்காலிக ஆசிரியையை நியமித்துள்ளனர். ஆனால் தேசிய கொடி பிரச்சினை எழுந்ததால் நேற்று பள்ளிக்கு சென்ற தற்காலிக ஆசிரியையை பணிக்கு வர வேண்டாம் என்று தலைமை ஆசிரியை ஜோதி திருப்பி அனுப்பியுள்ளார்.


இந்த தகவல் அறிந்து பள்ளியில் கூடிய பெற்றோர்களும், இளைஞர்களும் தலைமை ஆசிரியையிடம் தற்காலிக ஆசிரியை பிரச்சினை பற்றி கேட்ட போது, தேசிய கொடி பறந்ததை பத்திரிக்கைகளுக்கு கொடுத்தது யார் என்று தலைமை ஆசிரியை பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு எற்பட்டது. அதன் பிறகும் தலைமை ஆசிரியை சரியான பதில் சொல்லவில்லை என்று கூறி மாணவர்களை வகுப்புகளில் இருந்து வெளியே அழைத்து சென்று நுழைவாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது பள்ளி தலைமை ஆசிரியை ஜோதியை மாற்ற வேண்டும் என்றும் கூடுதல் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தனர். மேலும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை மாணவர்கள் மதிய உணவையும் புறக்கணிப்பார்கள் என்றும் பெற்றோர்கள் கூறினர்.


பெற்றோர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்துவது பற்றி அறிந்த திருவரங்குளம் வட்டார கல்வி அதிகாரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தலைமை ஆசிரியை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்த பெற்றோர் தலைமை ஆசிரியையை மாற்ற வேண்டும். மேலும் கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். தற்காலிகமாக மாற்று பணியில் ஆசிரியர் நியமனம் செய்யப்படும் என்றும், தலைமை ஆசிரியை இடமாற்றம் என்பது கல்வி ஆண்டு முடிந்த பிறகே செய்ய முடியும் என்று பெற்றோர்களிடம் சமாதானம் கூறினார். அதன் பிறகு மாணவர்களை பெற்றோர்கள் வகுப்புகளுக்கு அனுப்பினார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டிருந்தது.

Next Story