நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது


நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது
x
தினத்தந்தி 21 Feb 2019 10:45 PM GMT (Updated: 21 Feb 2019 10:40 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி உறுதியாகி விட்டது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரை, 

கடந்த தி.மு.க. ஆட்சியில் காவிரி, முல்லை பெரியாறு விவகாரங்களில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. அவை அனைத்தையும் ஜெயலலிதா சட்டப்போராட்டம் நடத்தி மீண்டும் மீட்டு கொடுத்தார். தற்போது தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது. அதனை பொதுமக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தினமும் பொய்யை மக்களிடம் விதைத்து வருகிறார். அதனை மக்கள் நகைப்பாக பார்க்கிறார்கள். அ.தி.மு.க. நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க மெகா கூட்டணியை அமைத்து உள்ளது. இது தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. தமிழகம், புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதியாகி விட்டது. நாடாளுமன்ற தேர்தலோடு, தி.மு.க. கதை முடிந்து விடும். அதனை அ.தி.மு.க. தொண்டர்கள் முடித்து வைத்தார்கள் என்ற பெருமை நமக்கு கிடைக்கும் வகையில் உழைக்க வேண்டும்.

ஜெயலலிதா பிறந்த நாள் விழா வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை வார்டு வாரியாக சிறப்பாக கொண்டாட வேண்டும். ஏழை, ஏளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். வருகிற 27-ந் தேதி பழங்காநத்தத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்ளும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டம் அ.தி.மு.க. தேர்தல் வெற்றி முன்னோட்டமாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். இதில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story