ஆத்தூர் அருகே பயங்கரம்: 3-வது மனைவி அடித்துக்கொலை நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் வெறிச்செயல்


ஆத்தூர் அருகே பயங்கரம்: 3-வது மனைவி அடித்துக்கொலை நடத்தையில் சந்தேகப்பட்டு கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 22 Feb 2019 11:15 PM GMT (Updated: 22 Feb 2019 7:01 PM GMT)

ஆத்தூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு, 3-வது மனைவியை கணவர் அடித்துக்கொன்றார்.

ஆத்தூர், 

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிங்காரம் (வயது 60). கூலித்தொழிலாளி. இவருடைய தொந்தரவு தாங்க முடியாமல், முதல் மனைவி அவரை பிரிந்து சென்று விட்டார். இதனால் 2-வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்து விட்டார்.

இதைத்தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சுமதி (45) என்ற பெண்ணை 3-வதாக சிங்காரம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தங்கமணி (21) என்ற மகளும், வேலு (17), சக்தி (13) என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் அங்குள்ள ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் மாடுகளை வளர்த்து, பால் கறந்து விற்று வருகிறார்கள். அதில் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் சுமதியின் நடத்தையில் சிங்காரத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மதியம் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்களது மகள் தங்கமணி, தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தார். இதில் சமாதானம் அடைந்த சிங்காரம் வீட்டில் அமைதியாக இருந்தார். பின்னர் அனைவரும் தூங்கச்சென்று விட்டனர்.

நேற்று காலை 5 மணிக்கு மாடுகளிடம் பால் கறக்க சுமதி, மாட்டு கொட்டகைக்கு சென்றார். அவரை தொடர்ந்து அங்கு சென்ற சிங்காரம் பால் கறந்து கொண்டிருந்த, சுமதியுடன் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த சிங்காரம் அருகில் இருந்த செங்கல் மற்றும் உருட்டுக்கட்டையால் சுமதியின் தலையில் பலமாக அடித்தார். இதில் ரத்தவெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த சிங்காரம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதனிடையே காலையில் தாய் வீட்டுக்கு வராததால், வேலு மாட்டு கொட்டகைக்கு சென்றார். அங்கு தனது தாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடப்பதை பார்த்து கதறி அழுதார். இது பற்றி ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு பொன் கார்த்திக்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் கொலை செய்யப்பட்ட சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை தொடர்பாக ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சிங்காரத்தை வலைவீசி தேடி வருகிறார்கள்.

3-வது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கணவரே படுகொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story