தூத்துக்குடியில் கடலோர காவல்படை மாவட்ட தலைமையகம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்


தூத்துக்குடியில் கடலோர காவல்படை மாவட்ட தலைமையகம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 22 Feb 2019 10:45 PM GMT (Updated: 22 Feb 2019 8:56 PM GMT)

தூத்துக்குடியில் கடலோர காவல்படை மாவட்ட தலைமையகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் கடலோர காவல்படை நிலையம் அமைந்து உள்ளது. இந்த நிலையம், இந்தியாவின் 16-வது கடலோர காவல்படை மாவட்ட தலைமையகமாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று மாலை கடலோர காவல்படை அலுவலக வளாகத்தில் நடந்தது. விழாவுக்கு கடலோர காவல்படை கிழக்கு பிராந்திய கமாண்டர் பரமேஷ் தலைமை தாங்கினார்.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக தலைவர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு கடலோர காவல்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து கடலோர காவல்படை புதிய மாவட்ட தலைமையகத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக்காக கடலோர காவல்படை 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று சிறந்த பாதுகாப்பு படையாக மாறி உள்ளது. இதில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சிறந்த தொழில்நுட்பங்கள் அடங்கிய கப்பல்கள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் கடல்சார் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்திய கடலோர காவல்படையில் கட்டமைப்பு, மனிதவளம் ஆகியவற்றின் விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கப்பட்டு உள்ளது. நாங்கள் பாதுகாப்போம் என்ற கொள்கையுடன் கடலோர காவல்படை செயல்பட்டு வருகிறது. கடலோர காவல்படை சிறந்த முறையில் பொறுப்புகளை செய்து வருவது பெருமைப்படத்தக்கது ஆகும்.

தீவுகள், கடலோர முனையங்கள், கடல் சூழியல் மற்றும் கட்டமைப்புகளை பாதுகாத்தல், சுற்றுப்புறச்சூழலை பாதுகாத்தல், கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளில் சுங்கத்துறை மற்றும் இதர துறைகளுக்கு உதவுதல், சர்வதேச கடல் மற்றும் இந்திய கடல் பகுதியில் சட்டத்தை அமல்படுத்துவது, அறிவியல் பூர்வமான தகவல் சேகரித்தல், போர் காலங்களில் தேசியபாதுகாப்பில் ஈடுபடுவது கடலோர காவல்படையின் பொறுப்புகள் ஆகும். இதில் இந்திய கடலோர காவல்படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்தியா சர்வதேச கடல்வழிப்பாதையில் நடுவில் அமைந்து உள்ளது. கிழக்கு ஆசியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கப்பல்கள் நம் கடல் பாதையை கடந்துதான் செல்ல வேண்டும். இந்தியாவின் வாணிபத்தில் 95 சதவீதம் கடல்வழியாக நடக்கிறது.

இந்திய கடலோர காவல்படை உலகில் 4-வது பெரிய கடலோர காவல்படை ஆகும். இங்கு 139 கப்பல்களும், 62 விமானங்களும் உள்ளன. இந்த படை 2023-ம் ஆண்டில் 200 கப்பல்களையும், 100 விமானங்களையும் பெற்று இருக்கும். இந்தியாவின் மொத்த கடற்கரையில் 13 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளது. இது மொத்தம் 967 கிலோ மீட்டர் தூரம் ஆகும். இதில் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய 3 பெருந்துறைமுகங்களும், பல சிறு மீன்பிடி துறைமுகங்களும் உள்ளன. தமிழக மக்கள் தொகையில் 2 சதவீதம் மக்கள் கடற்கரையில் வசிக்கின்றனர். இவர்கள் பாதுகாப்பு படைகளின் காதுகளாகவும், கண்களாகவும் உள்ளனர். மீனவர்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தும் போது, மீனவர்கள் ஏதேனும் வெளிநாட்டு படகுகளையோ, சந்தேகப்படும்படியான நடமாட்டங்களை பார்த்தால் உடனடியாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள கடலோர காவல்படை மீனவர்களுடன் கலந்துரையாடல் என்பதை கடந்து, அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது பெருமையாக உள்ளது. கடலோர காவல்படை மீனவர்களுக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களை பயன்படுத்துவதற்கு உதவுகிறது. இது மீனவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும்.

இந்த நிலையில் தீவிர மீட்பு பணிக்காக அரசு தூத்துக்குடியில் உள்ள கடல்சார் மீட்பு துணை மையத்தை, கடல்சார் மீட்பு துணை மையமாக தரம் உயர்த்தி உள்ளது. நாட்டின் பலம், பாதுகாப்பு படையின் பலத்துடன் இணைக்கப்பட்டது. ஆகையால் பாதுகாப்பு படையினருக்கான தேவைகளை முன்னுரிமை அளித்து செய்வது நமது முக்கிய தேவை ஆகும். நம் பரந்த கடல் பகுதியில் மீனவர்கள், கடலோர காவல்படையினர் ஒருங்கிணைந்து செயல்படும் போது, தேசிய பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும். இந்திய கடலோர காவல்படை தங்கள் பொறுப்புகளை சிறப்பாக செய்து வருகிறது. அதற்காக பல பாராட்டுக்களையும் பெற்று உள்ளனர். சமீபத்தில் நடந்த கஜா புயல் தாக்குதலின் போது, 74 கப்பல் மற்றும் 10 விமானங்கள் மூலம் மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு திரும்புவதற்கு நடவடிக்கை எடுத்தனர். இதனால் மீனவர்கள் இழப்பு தடுக்கப்பட்டது. புயல் தாக்கத்துக்கு பிறகு கடலோர காவல்படையினர் பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரண பொருட்கள் கொடுத்தனர். கடலோர காவல்படை தொடங்கப்பட்ட பிறகு அவர்களின் சிறப்பான செயல்பாடுகாரணமாக இந்தியாவில் இதுவரை 9 ஆயிரத்து 193 மீனவர்கள் மீட்கப்பட்டு உள்ளனர்.

இந்தியா மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் கடல் சூழியலை பாதுகாக்க அண்டை நாடுகளான வங்கதேசம், மாலத்தீவு, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. இதற்காக இந்தியா, தெற்காசிய கூட்டு சுற்றுச்சூழல் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் தெற்காசிய பிராந்தியத்தில் ரசாயணம் மற்றும் எண்ணெய் மாசு ஏற்பட்டால், அதனை அகற்றுவதற்கு வழிவகை செய்து உள்ளது. இந்த மண்டல எண்ணெய் மாசு கட்டுப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டத்தை இந்திய கடலோர காவல்படை செயல்படுத்தி வருகிறது. இந்திய கடல் பகுதியில் கடலோர காவல்படை தேசிய பாதுகாப்பு, உயிர்பாதுகாப்பு, சொத்துக்களை பாதுகாப்பது, மற்றும் பேரிடர் காலங்களிலும் மெத்தனமாக இல்லாமல் சிறப்பாக செயல்படும் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது. கடலோர காவல்படையினர் தேசத்தின் பாதுகாப்புக்காக சுயநலம் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் புதிய தலைமையகம் உருவாக்கப்பட்டு புதிய சரித்திரம் படைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, வ.உ.சி. துறைமுக பொறுப்புக்கழக துணைத்தலைவர் வையாபுரி, மாவட்ட வன அலுவலர் திருமால், உதவி கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன், தூத்துக்குடி கடலோர காவல்படை நிலைய கமாண்டர் அரவிந்த் சர்மா, விசாகபட்டினம் கிழக்கு பிராந்திய கடலோர காவல்படை தலைமை அதிகா ஹர்போலா, சவிதா சர்மா, மண்டபம் கடலோர காவல்படை கமாண்டர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story