புதுச்சத்திரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


புதுச்சத்திரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 23 Feb 2019 10:30 PM GMT (Updated: 23 Feb 2019 5:51 PM GMT)

புதுச்சத்திரம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புவனகிரி, 

புதுச்சத்திரம் அருகே உள்ள கம்பளிமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வமூர்த்தி, தொழிலாளி. இவரது மகள் கவுதமி (வயது 24). நேற்று முன்தினம் காலை செல்வமூர்த்தியும், அவரது மனைவியும் வேலைக்கு சென்று விட்டனர். கவுதமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் மாலையில் வேலை முடிந்ததும் செல்வமூர்த்தியும், அவரது மனைவியும் வீட்டுக்கு திரும்பி வந்தனர்.

அப்போது வீட்டின் கதவு பூட்டிக் கிடந்தது. செல்வமூர்த்தி நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து விட்டு வீட்டுக்குள் சென்றார்.

அங்கு கவுதமி தூக்கில் பிணமாக தொங்கினார். இதை கண்ட செல்வமூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் கவுதமியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கவுதமி வீட்டில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கவுதமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து செல்வமூர்த்தி புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதமி உடல்நலக்கோளாறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story