ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 23 Feb 2019 11:00 PM GMT (Updated: 23 Feb 2019 6:53 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தஞ்சையில் நடந்துவரும் திராவிடர் கழக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்,

திராவிடர் கழகத்தின் 2 நாள் மாநில மாநாடு தஞ்சையில் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று காலையில் மாநாடு தொடங்கியது. மாநாட்டு கொடியை பொருளாளர் குமரேசன் ஏற்றி வைத்தார். பின்னர் நடந்த மாநாட்டு அரங்கை செயலவை தலைவர் அறிவுக்கரசு திறந்து வைத்து பேசினார். பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்றார்.

பெரியார் மருத்துவ குழுமத்தின் இயக்குனர் டாக்டர் கவுதமன், சமூக நீதி, வரலாற்று கண்காட்சியை திறந்து வைத்தார். மாநாட்டிற்கு துணைத்தலைவர் கலி.பூங்குன்றன் தலைமை தாங்கினார். தந்தை பெரியார் படத்தை தமிழர் திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், நாகம்மையார், மணியம்மையார் படத்தை துணைத்தலைவர் ராஜகிரி தங்கராசு, சுயமரியாதை சுடரொளிகள் படத்தை பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவன தலைவர் சண்முகம் ஆகியோர் திறந்து வைத்து பேசினர்.

மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து கருத்தரங்கம், பேரணி நடைபெற்றது. பேரணி தஞ்சை ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கி மாநாட்டு திடலை அடைந்தது. பேரணியை மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் தொடங்கி வைத்தார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மத்திய பா.ஜ.க. அரசும், அதற்கு ஏவலாக இருந்து செயல்படும் அ.தி.மு.க. அரசும் அகற்றப்பட வேண்டும். இந்த நிலையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும், அதனைத்தொடர்ந்து நடைபெற உள்ள 21 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும், பா.ஜ.க. மற்றும் அதனுடன் கூட்டணி சேர்ந்த கட்சிகளை வீழ்த்தி தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரித்து பெரும் வெற்றியை பெற்றுத்தருமாறு வாக்காளர்களை கேட்டுக்கொள்வது.

தீண்டாமையின் மூலகாரணம் சாதி என்பதால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் இடம் பெற்றுள்ள தீண்டாமை ஒழிக்கப்படுகிறது என்பதற்கு பதிலாக சாதி ஒழிக்கப்படுகிறது என சட்ட திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்வோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரையும் உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வளர்ச்சி, செயல்பாடுகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் மத்திய அரசு அளிக்க வேண்டும். ஈழத்தமிழர்களின் உரிமை வாழ்வு உறுதிப் படுத்தப்பட வேண்டும்.

தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகள் சிறையில் கழித்த பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

மத்திய அரசு இந்தி, சமஸ்கிருத திணிப்பை கைவிட வேண்டும். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை மத்திய ஆட்சி மொழியாக்க வேண்டும். தமிழகத்தில் சமஸ்கிருதமாக்கப்பட்ட ஊர்களின் பெயர்களை மீண்டும் தமிழிலேயே மாற்ற ஆவன செய்ய வேண்டும்.

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகம் திட்டமிட்டு அதற்கான வரைபடம் தயாரிக்க மதிப்பீட்டு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. தமிழ்நாடு எல்லா நிலைகளிலும் வஞ்சிக்கப்படும் இடத்திற்கு தள்ளப்படுகிறது. எனவே இதில் அரசியல் கண்ணோட்டம் இன்றி தமிழ்நாடே எழுந்து நின்று இதனை முறியடியக்க வேண்டும்.

தமிழகத்திலும், தென் மாநிலங்களிலும் வடநாட்டினர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பல்வேறு விளைவுகள் ஏற்படுகின்றன. இதனை வரைமுறை செய்வதற்கான சட்டத்தை மாநில அரசு கொண்டுவர வேண்டும். நியூட்ரினோ, மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும். தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) 2-வது நாள் சமூக நீதி மாநாடு நடைபெறுகிறது. இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

Next Story