இளைஞர்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டார் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் குற்றச்சாட்டு


இளைஞர்களை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டார் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 23 Feb 2019 10:30 PM GMT (Updated: 23 Feb 2019 8:46 PM GMT)

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்று கூறி இளைஞர் களை பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டதாக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சீனிவாசன் குற்றம் சாட்டினார்.

தேனி,

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் ‘செல்வோம் கிராமத்தை நோக்கி’ என்ற தலைப்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் சீனிவாசன், அகில இந்திய செயலாளர்கள் ஜெபி மேத்தர், ஆபிரகாம் ராய் மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் அசன் ஆரூண், மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தை தொடர்ந்து அகில இந்திய துணை தலைவர் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பேன் என்று கூறினார். அவர் கூறியது போல் வேலை வாய்ப்புகள் வழங்காமல் இளைஞர்களை மோடி ஏமாற்றி விட்டார். தமிழகத்தில் திருப்பூர், மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மோடி ஆட்சி காலத்தில் வியாபாரிகள் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். இதனால் இருந்த வேலை வாய்ப்புகளையும் இளைஞர்கள் இழந்துள்ளனர். காஷ்மீரில் துணை ராணுவ வீரர்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதல்கள் குறித்து 8-ந்தேதியே உளவுத் துறை எச்சரித்துள்ளது. மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தோற்றுவிட்டது.

நாடு முழுவதும் இளைஞர் களும், விவசாயிகளும் காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் நேசிக்கின்றனர். தமிழ்நாட்டையும், இந்தியாவையும் பாதுகாக்க காங்கிரஸ் கட்சியால் தான் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story