அவினாசியில், 28-ந்தேதி நடைபெறும் அத்திக்கடவு-அவினாசி திட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கு இடம் தேர்வு: சபாநாயகர், அமைச்சர் பார்வையிட்டனர்


அவினாசியில், 28-ந்தேதி நடைபெறும் அத்திக்கடவு-அவினாசி திட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கு இடம் தேர்வு: சபாநாயகர், அமைச்சர் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 23 Feb 2019 11:30 PM GMT (Updated: 23 Feb 2019 11:21 PM GMT)

அத்திக்கடவு-அவினாசி திட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமையில் அவினாசியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

அவினாசி,

அவினாசியில் வருகிற 28-ந்தேதி நடைபெறவுள்ள அத்திக்கடவு-அவினாசி திட்ட அடிக்கல் நாட்டு விழாவிற்கு சபாநாயகர் தனபால் தலைமையில் அவினாசியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் குளம் குட்டைகளுக்கு நீர் நிரப்பும் திட்டமே அத்திக்கடவு-அவினாசி திட்டமாகும். இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றன.

அதன் பலனாக வருகிற 28-ந் தேதி அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. அதற்காக அவினாசியில் கடந்த 2 நாட்களாக பல்வேறு இடங்களை தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து நேற்று சபாநாயகர் ப.தனபால் தலைமையில், அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.க்கள் கே.என்.விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பிரபாகரன், தாசில்தார் வாணிலட்சுமி ஜெகதாம்பாள், அவினாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பரமசாமி, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அவினாசி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க.செயலாளர் சேவூர் வேலுசாமி, நகர செயலாளர் ராமசாமி, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணை செயலாளர் ஜெகதீசன் உள்ளிட்ட குழுவினர் அவினாசி மொண்டிநாதம் பாளையம் பிரிவு எதிரே புறவழிச்சாலை ரவுண்டானா பாலத்திற்கு அருகில் உள்ள 2½ ஏக்கர் இடத்தை ஆய்வு செய்து அந்த இடத்தில் அடிக்கல் நாட்டு விழா நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

அதன்படி அந்த இடத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் அமர்வதற்கு ஏற்றார்போல் பந்தல் மற்றும் இருக்கைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளை விரைந்து செய்யுமாறு சபாநாயகர் ப.தனபால் பொதுப்பணித்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது அ.தி.மு.க. இளைஞரணி ஜெயபால், ராஜேந்திரன், ஏ.ஆர் கார்த்திகேயன், எம்.எஸ்.மூர்த்தி, காந்தி என்ற மாரிமுத்து, சுப்பிரமணியம், நடராசன், அவினாசிலிங்கம் பாளையம் தனபால், சண்முகம் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.


Next Story