மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல், ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேர் பலி


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல், ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 24 Feb 2019 11:15 PM GMT (Updated: 24 Feb 2019 6:21 PM GMT)

மேல்மலையனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் ஊராட்சி செயலாளர் உள்பட 2 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே உள்ள சொக்கனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பீமன் மகன் தமிழ்நம்பி(வயது 20). இவர் அதே ஊரில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று மதியம் தமிழ்நம்பி, மேல்புதுப்பட்டை சேர்ந்த கலைச்செல்வன் மகள் சந்திரகலா(18) என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் செஞ்சியில் இருந்து வளத்தி நோக்கி புறப்பட்டார். மேல்மலையனூர் அடுத்த அண்ணமங்கலம் தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது, எதிரே வந்த அரசு டவுன் பஸ் தமிழ்நம்பி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த தமிழ்நம்பி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சந்திரகலா படுகாயத்துடன் உயிருக்கு போராடினார். இதைபார்த்த அந்த வழியாக வந்தவர்கள் சந்திரகலாவை மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்திரகலா பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே விபத்து பற்றி தகவல் அறிந்த வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான தமிழ்நம்பியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் பலியான சந்திரகலா கடலூர் அரசு ஐ.டி.ஐ. மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் ஊராட்சி செயலாளர், ஐ.டி.ஐ. மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story