மாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு


மாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
x
தினத்தந்தி 24 Feb 2019 10:30 PM GMT (Updated: 24 Feb 2019 8:16 PM GMT)

மாநில அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நடத்தப்பட்ட “ஸ்கேட்டிங்” போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும், 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் 8 வயதுக்கு மேல் 16 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் 3-ம் ஆண்டு மாநில அளவிலான “ஸ்கேட்டிங்” போட்டி பெரம்பலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 8 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று முன்தினம் நடந்த “ஸ்கேட்டிங்” போட்டியில் 300 பேர் பங்கேற்றனர். நேற்று 8 வயதுக்கு மேல், 16 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரிங் 1, ரிங் 2, ரிங் 2 ஏ ஆகிய 3 பிரிவுகளில் “ஸ்கேட்டிங்” போட்டி தனித்தனியாக நடத்தப்பட்டன.

இதில் பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட “ஸ்கேட்டிங்” போட்டியில் முதல் இடம் பிடித்த வீரர்- வீராங்கனைகளுக்கு தங்க பதக்கமும், 2-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெள்ளி பதக்கமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு வெண்கலப்பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் 4 முதல் 6-ம் இடம் வரை பிடித்தவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட ரோலர் ஸ்கேட்டிங் சங்கத்தினர் செய்திருந்தனர். 

Next Story