ஆரணியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலைகள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்


ஆரணியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலைகள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 24 Feb 2019 10:53 PM GMT (Updated: 24 Feb 2019 10:53 PM GMT)

ஆரணியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலைகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

ஆரணி,

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆரணி - வேலூர் நெடுஞ்சாலையில் சேவூர் பைபாஸ் சந்திப்பில் அ.தி.மு.க. நிறுவனரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆர்., முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவ வெண்கல சிலையும் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா, ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா, 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்றும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது.

விழாவுக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி. மு.க. செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில விவசாய அணியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அக்ரி. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் அமைச்சர் எஸ்.ராமச்சந்திரன், செஞ்சி வி.ஏழுமலை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. வரவேற்றார்.

விழாவில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பிரமாண்ட கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி இன்று ஜெயலலிதா உருவ சிலையும், எம்.ஜி.ஆர். உருவ சிலையும் திறந்து வைக்க கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். அதன்பேரில் இங்கு திறப்பு விழா நடைபெறுகிறது.

ஏற்கனவே ஜெயலலிதா உருவ சிலையை ஆரணி நகரில் அமைத்தோம். சில காரணங்களால் அதனை எடுத்துவிட்டோம். இப்போது இங்கு சென்னை எம்.ஜி.ஆர். நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் ஏ.சி.சண்முகம் தனக்கு சொந்தமான இடத்தில் சிலை அமைக்க இடம் கொடுத்துள்ளார். இதற்கு முறையான அரசாணை பெற்று இங்கு சிலைகள் நிறுவப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா கடந்த வாரமே முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் பங்கேற்று திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. சில காரணங்களால் தள்ளிப் போனது. தற்போது ஜெயலலிதா பிறந்த நாளில் சிலைகளை திறக்க எனக்கு அவர்கள் உத்தரவிட்டனர்.

இது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம். இந்த வழியாக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் வரும்போது தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

இந்த நன்நாளில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நம்முடன் சேர்ந்திருக்கும் கூட்டணி வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய கடுமையாக உழைக்க வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து விழா மேடை அருகில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் ஆரணி நகரில் எம்.ஜி.ஆர். சிலை முன்பாகவும், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு அமைச்சர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினர்.

நிகழ்ச்சிகளில் ஏ.சி.எஸ். கல்வி குழும செயலாளர் ஏ.சி.ரவி, அரசு வக்கீல் கே.சங்கர், ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் அ.கோவிந்தராசன், வேலூர் ஆவின் துணைத்தலைவர் பாரி பி.பாபு, நகர அவைத்தலைவர் எஸ்.ஜோதிலிங்கம், மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் கஜேந்திரன், மகளிரணி நிர்வாகி கலைவாணி, நகர செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், எம்.வேலு, எம்.பாண்டியன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் சேவூர் ஜெ.சம்பத், சேவூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் எம்.பெருமாள், அத்திமலைப்பட்டு அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர் சங்கரிபாலசந்தர் மற்றும் கூட்டுறவு சங்கத்தலைவர்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Next Story