பா.ஜ.க., பா.ம.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி


பா.ஜ.க., பா.ம.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி
x
தினத்தந்தி 25 Feb 2019 11:30 PM GMT (Updated: 25 Feb 2019 7:29 PM GMT)

பா.ஜ.க., பா.ம.க.வுடன் கூட்டணி சேர்ந்ததால் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

ஈரோடு,

ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கொடியேற்று விழா ஈரோடு புதுமைக்காலனியில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்கினார். விழாவில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்துகொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் அரசியல் ஆதாயத்துக்காக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இணைந்து உள்ளார்.

ராமதாஸ் தனது குடும்பத்தை சேர்ந்த யாருக்கும் பதவி அளிக்க மாட்டேன் என்று ஏற்கனவே கூறி இருந்தார். ஆனால் மத்திய மந்திரி பதவி வாய்ப்பு கிடைத்தபோது அவருடைய மகன் அன்புமணி ராமதாசுக்கு பதவியை பெற்று கொடுத்தார். 20 ஆண்டுகளாக அவர் கொள்கை என்று கூறி மக்களை ஏமாற்றி வருகிறார். எப்படி பிரதமர் நரேந்திரமோடி பல்வேறு வாக்குறுதிகளை கூறி ஏமாற்றினாரோ, அதுபோல் ராமதாசும் மக்களை ஏமாற்றுகிறார். எனவே ஜூனியர் மோடியாக ராமதாஸ் செயல்படுகிறார்.

இந்த கூட்டணியை பொறுத்தவரை பா.ம.க. அரசியல் தரகராக செயல்பட்டு உள்ளது. இது பா.ம.க. தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரதமர் நரேந்திரமோடி கியாஸ் மானியம் அளிப்பதாக கூறுகிறார். ஆனால் இதுவரை யாருக்கும் கியாஸ் மானியம் கிடைக்கவில்லை.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கொடுப்பதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இது ஒருநாள் டீ குடிப்பதற்குக்கூட காணாது. ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் விவசாயிகள் கடனை முழுமையாக தள்ளுபடி செய்வதாக ராகுல்காந்தி அறிவித்து உள்ளார். அதுபோல் வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக்கடனையும் தள்ளுபடி செய்வோம் என்று ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நின்றால்கூட டெபாசிட் பெற வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பா.ஜ.க., பா.ம.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடுவதால் டெபாசிட் கூட கிடைக்காது. தே.மு.தி.க.வை பொறுத்தவரை கூட்டணி இழுபறி இருந்து கொண்டேதான் இருக்கும். இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு தே.மு.தி.க. காணாமல்போய் விடும்.

தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இதனுடன் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் இணைந்து செயல்பட உள்ளன. எனவே வருகிற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்று ஒதுக்கீடு செய்யப்படவில்லை. தொகுதிகளை ஒதுக்கீடு செய்த பின்னர் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை அகில இந்திய காங்கிரஸ் கட்சி முடிவு செய்து அறிவிக்கும்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

இதில் மண்டல தலைவர் ஜாபர்சாதிக், மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ்ராஜப்பா உள்பட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.

Next Story