பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு; வியாபாரிகள் அமைதி ஊர்வலம்


பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு; வியாபாரிகள் அமைதி ஊர்வலம்
x
தினத்தந்தி 26 Feb 2019 10:15 PM GMT (Updated: 26 Feb 2019 7:52 PM GMT)

புதுச்சேரியில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் அமைதி ஊர்வலம் நடத்தினார்கள்.

புதுச்சேரி,

50 மைக்ரான் அளவுக்கு குறைவாக தயாரிக்கப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யப்போவதாக புதுவை அரசு அறிவித்துள்ளது. இந்த தடை உத்தரவு வருகிற 1-ந்தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைக்கு பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தடை உத்தரவு என்பது பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவானது என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். தடை உத்தரவினால் புதுவையில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

எனவே பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் அரசின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி ஊர்வலம் நடத்தப்போவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். அதன்படி அவர்கள் நேற்று காலை ரோடியர் மில் திடலில் கூடினார்கள். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர்.

ஊர்வலத்துக்கு புதுவை வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் பாலு, பொருளாளர் தங்கமணி, பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் பாபு, செயலாளர் சுதாகர், துணைத்தலைவர் அசோகன், நிர்வாகிகள் சித்தானந்தம், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை தமிழக வணிகர் சங்க துணைத்தலைவர் ஜோதிலிங்கம் தொடங்கிவைத்தார்.

ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனர். ஊர்வலம் கடலூர் சாலை, மறைமலையடிகள் சாலை, அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக ஆம்பூர் சாலையை அடைந்தது. அதற்கு மேல் செல்ல அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டும் சட்டசபைக்கு சென்று துணை சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தைப்போல் புதுவையிலும் பிளாஸ்டிக் தடை சட்டத்தை அமல்படுத்தினால் புதுவையில் இருக்கும் சிறு குறு வியாபாரிகளும், ஓட்டல் நடத்துபவர்களும், உணவுபொருட்கள் தயாரிப்பவர்களும் பெரும் தொழில் இழப்புக்கு உட்படுத்தப்படுவார்கள். அதுமட்டுமின்றி இந்த சட்டம் முழுமையாக உள்ளூரில் உள்ள வணிகர்களை முடக்குவதற்கு நிகராக உள்ளது.

ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. வணிகர்கள் ஜி.எஸ்.டி. வரி மூலமாகவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாகவும் மிகுந்த கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்கள். வியாபாரம் பெரிய அளவில் நடைபெறாமல் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நல்ல காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் இருக்கும் வியாபாரிகளின் நம்பிக்கையை உடைக்கும் அளவுக்கு இந்த பிளாஸ்டிக் தடை சட்டம் உள்ளது.

கார்ப்பரேட் கம்பெனிகள் தொடர்ந்து பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவார்கள். நிறைய பொருட்களுக்கு மாற்று இல்லாத நிலையிலும், மாற்று இருக்கின்ற பொருட்கள் 200 சதவீத விலை உயர்வு உள்ள நிலையில் நாங்கள் அதை பயன்படுத்தினால் கார்ப்பரேட் கம்பெனிகளுடன் போட்டியிட முடியாத அபாயம் ஏற்படும்.

சுற்றுச்சூழலிலும், சுகாதாரத்திலும் எங்களுக்கும் அக்கறை உள்ளது. முதல்-அமைச்சர் இந்த பிளாஸ்டிக் தடையை நிறுத்திவைத்து ஒரு குழு அமைத்து எந்தெந்த பொருட்களை தடை செய்யலாம்? அவைகளை எப்படி நெறிப்படுத்தலாம்? என்று ஆராய்ந்து வியாபாரம் பாதிக்காத அளவுக்கு ஒரு புரிதலுடன் அந்த குழு தரும் பரிந்துரையின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதுமட்டுமின்றி பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க மத்திய அரசு 2022 வரை கால அவகாசம் கொடுத்துள்ள நிலையில் நாடு முழுவதும் ஒரே சட்டம் வந்தால் அதை நாங்களும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளோம். அதுவரை புதுவையில் இந்த தடை சட்டம் அவசியம் இல்லை.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Next Story