காஞ்சீபுரம் அருகே நகைக்கடை அதிபரிடம் துப்பாக்கி முனையில் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது


காஞ்சீபுரம் அருகே நகைக்கடை அதிபரிடம் துப்பாக்கி முனையில் ரூ.20 லட்சம் கொள்ளையடித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2019 10:45 PM GMT (Updated: 26 Feb 2019 9:45 PM GMT)

காஞ்சீபுரம் அருகே நகைக்கடை அதிபரை துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.20 லட்சம் கொள்ளையடித்து சென்ற வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). நகைக்கடை வைத்து உள்ளார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோர் காஞ்சீபுரம் அருகே அடகு வைத்து மீட்கப்பட்ட 2 கிலோ தங்க நகைகள் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருப்பதாகவும், அதனை மலிவு விலையில் வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனை நம்பிய மணிகண்டன் ரூ.20 லட்சம் எடுத்துக் கொண்டு அவர்கள் 2 பேருடன் காஞ்சீபுரம் வந்துள்ளார். காஞ்சீபுரத்தில் சரவணவேல் என்பவரும் அந்த நபர்களுடன் இணைந்தார். நகை குறித்து மணிகண்டன் கேட்டபோது நகையை கொடுக்காமல் காஞ்சீபுரம் முழுவதும் சுற்றி அலைக்கழித்துள்ளனர்.

பின்னர் பாலுச்செட்டிசத்திரம் பகுதியில் நகைகள் இருப்பதாக அவரை அழைத்துச் சென்று கீழம்பி பைபாஸ் சாலை அருகே தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மணிகண்டனை மிரட்டி ரூ.20 லட்சத்தை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து மணிகண்டன் பாலுச்செட்டிசத்திரம் போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 3 பேரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் காஞ்சீபுரம் பெரியார் நகர் வளைவு பகுதியில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வருவதாக காஞ்சீபுரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று கார் மற்றும் மோட்டார் சைக்கிளை மடக்கிப்பிடித்தனர்.

அதில் இருந்த 3 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த சரவணவேல் என்கிற சிங்காரவேல்(வயது 30), கார் டிரைவர் கலைமணி(25), மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த ராம்குமார்(24) என்பது தெரியவந்தது.

அவர்கள் 3 பேரும் மணிகண்டனிடம் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதில் சிங்கார வேல் மீது காஞ்சீபுரம் போலீஸ் நிலையத்தில் இரட்டை கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும், வேலூர் மாவட்டம் காட்பாடி, ஆந்திர மாநில போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளது.

கைதானவர்களிடம் இருந்து ஒரு கார், மோட்டார் சைக்கிள், துப்பாக்கி, ரூ.13 லட்சத்து 42 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

இந்த கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை பிடித்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி வெகுவாக பாராட்டினார்.

Next Story