2,675 பெண்களுக்கு ரூ.14¼ கோடியில் தாலிக்கு தங்கம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்


2,675 பெண்களுக்கு ரூ.14¼ கோடியில் தாலிக்கு தங்கம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்
x
தினத்தந்தி 27 Feb 2019 11:30 PM GMT (Updated: 27 Feb 2019 10:51 PM GMT)

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி 2,675 பெண்களுக்கு ரூ.14¼ கோடியில் தாலிக்கு தங்கம் வழங்கினார்.

விருதுநகர்,

விருதுநகர் மற்றும் சிவகாசியில் நடந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி 2,675 ஏழை பெண்களுக்கு ரூ.14 கோடியே 35 லட்சம் மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவி வழங்கினார்.

விருதுநகர் மற்றும் சிவகாசியில் கலெக்டர் சிவஞானம் தலைமையிலும், ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலையிலும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு 2,675 ஏழை, எளிய பெண்களுக்கு ரூ.14 கோடியே 35 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதிஉதவியையும், மாற்றுத்திறனாளிகள் 299 பேருக்கு ரூ.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். ஜெயலலிதாவின் சிந்தனையில் உதித்த உன்னத திட்டமான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதி உதவி வழங்கும் திட்டம், ஏழை, எளிய பெண்களுக்கு திருமணம் நடப்பதற்கு கிடைத்த வரப்பிரசாத திட்டமாகும். குண்டுமணி தங்கம் கூட இல்லாத ஏழை, எளிய குடும்பத்தில் படித்த பெண்களுக்கு தாயுள்ளத்தோடு இத்திட்டத்தை ஜெயலலிதா நடைமுறைப்படுத்தினார்.

அதே வழியில் தமிழக அரசும் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தங்கத்தை வெட்டி எடுக்கும் பெல்ஜியம் நாட்டில் கூட ஒரு கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படுவதில்லை. தமிழகத்தில்தான் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் விண்ணப்பித்த அனைத்து பெண்களுக்கும் இந்த உதவி வழங்கப்படும். மேலும் உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் மூலம் மானிய விலையில் இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் தேசபந்து திடலில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க சிறப்பு புகைப்பட கண்காட்சியை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். இக்கண்காட்சியில் அரசின் நலத்திட்டங்கள் பற்றி விரிவாக விளக்கும் வகையில் பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலும் அதி நவீன மின்னணு விளம்பர வாகனத்தின் மூலம் தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்க வீடியோ படக்காட்சியும் நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தின் ஈராண்டு சாதனை மலரை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வெளியிட அதனை கலெக்டர் சிவஞானம் பெற்றுக் கொண்டார்.

விருதுநகர்-சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கூட்ட அரங்கில் விவசாய துறை சார்பில் ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பிலான விவசாய எந்திரங்களை 38 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சிவஞானம், ராதாகிருஷ்ணன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story