சென்னை ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி விவசாயி கைது


சென்னை ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி விவசாயி கைது
x
தினத்தந்தி 1 March 2019 10:15 PM GMT (Updated: 1 March 2019 6:38 PM GMT)

சென்னை ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடியில் ஈடுபட்ட விவசாயி கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

சென்னை சவுகார்பேட்டை காளத்தி பிள்ளை தெருவை சேர்ந்தவர் ஹரிஹந்கோத்தி (வயது 38). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் நிலம் வாங்க முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவரிடம் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த சுப்பிரமணி, பிரதாப், லோகேஷ், ராமகோவிந்தன், விவசாயியான நரேஷ் (35) ஆகியோர் தங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் 25 சென்ட் நிலம் பொன்னேரி அருகேயுள்ள ஆலாடு கிராமத்தில் உள்ளது. அதை ஹரிஹந்கோத்திக்கு விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.

அத்ை-தொடர்ந்து அவர் கடந்த 2006-ம் ஆண்டில் நிலத்தை வாங்கி கொள்ள சம்மதம் தெரிவித்து ரூ.18 லட்சம் கொடுத்து கிரைய ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்த நிலையில் பணத்தை பெற்றுக்கொண்ட மேற்கண்ட 5 பேரும் கிரைய ஒப்பந்தத்தை ஹரிஹந்கோத்திக்கு தெரியாமல் ரத்து செய்துவிட்டார்கள். இதை அறிந்த ஹரிஹந்கோத்தி இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது நிலத்தை தராமலும், அவர் கொடுத்த ரூ.18 லட்சத்தை கொடுக்காமல் மோசடி செய்துள்ளார்கள்.

இதுகுறித்து ஹரிஹந்கோத்தி திருவள்ளூரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சாரதி, வாசுதேவன், சுமன், பாலாஜி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து நேற்று விவசாயி நரேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பொன்னேரி சிறையில் அடைத்தார்கள்.

இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் சுப்பிரமணி, பிரதாப், லோகேஷ், ராமகோவிந்தன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story