கிண்டியில் நடுரோட்டில் பெண் வெட்டிக்கொலை மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் வாலிபர் ஆத்திரம்


கிண்டியில் நடுரோட்டில் பெண் வெட்டிக்கொலை மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் வாலிபர் ஆத்திரம்
x
தினத்தந்தி 1 March 2019 10:45 PM GMT (Updated: 1 March 2019 7:46 PM GMT)

கிண்டியில், மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்ததால் நடுரோட்டில் பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய வாலிபர் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை கிண்டி நரசிங்கபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (வயது 45). இவருடைய கணவர் ராமச்சந்திரன், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ரேவதி, தனது 2 மகள்களுடன் வசித்து வந்தார். அவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

ரேவதியின் 20 வயது மகளுக்கும், கிண்டி மசூதி காலனியை சேர்ந்த கார் டிரைவர் வினோத் (27) என்பவருக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் வினோத்தின் நடவடிக்கை சரியில்லை என்று கூறி அந்த திருமணம் நிறுத்தப்பட்டது.

ஆனால் வினோத் தொடர்ந்து ரேவதியிடம் மகளை திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டு வந்தார். அதற்கு மறுத்து வந்த ரேவதி, தனது மகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டார். இதனால் கடந்த 5 நாட்களாக ரேவதியின் மகளை காணாமல் வினோத் தேடி வந்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த ரேவதியை கிண்டி வண்டிக்காரன் தெருவில் வினோத் தனது நண்பருடன் வழிமறித்து மீண்டும் மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

அதற்கு ரேவதி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த வினோத், தன்னிடம் இருந்த கத்தியால் ரேவதியின் கழுத்து, மார்பு பகுதியில் சரமாரியாக வெட்டிவிட்டு தனது நண்பருடன் தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த ரேவதி, ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இரவு 9.30 மணி வரை போலீசார் சம்பவ இடத்துக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சுமார் 1½ மணி நேரமாக ரேவதியின் உடல் ரத்த வெள்ளத்தில் அங்கேயே கிடந்ததால் அந்த பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து கிண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, கொலையான ரேவதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய வினோத் உள்பட 2 பேரை தேடி வருகின்றனர். நடுரோட்டில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story