தஞ்சையில், இன்று மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு எழுத்து தேர்வு - 2,069 பேர் எழுதுகின்றனர்


தஞ்சையில், இன்று மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு எழுத்து தேர்வு - 2,069 பேர் எழுதுகின்றனர்
x
தினத்தந்தி 1 March 2019 11:07 PM GMT (Updated: 1 March 2019 11:07 PM GMT)

தஞ்சையில் இன்று நடக்கும் மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வை 2,069 பேர் எழுதுகின்றனர்.

தஞ்சாவூர்,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர், உதவி பொறியாளர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகிய பதவிகள் மற்றும் குரூப்-1 முதன்மை தேர்வு நடைபெறுவது குறித்த முன்னேற்பாடு கூட்டம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர், உதவி பொறியாளர் பதவிக்கான எழுத்து தேர்வு இன்று(சனிக் கிழமை) காலையிலும், மாலையிலும் தஞ்சை பாரத் அறிவியல் மற்றும் நிர்வாகவியல் கல்லூரியில் நடக்கிறது. இந்த தேர்வை 288 பேர் எழுத உள்ளனர்.

மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான எழுத்து தேர்வு இன்று காலையில் 7 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 2,069 பேர் எழுதுகின்றனர். குரூப்-1 முதன்மை தேர்வு நாளை(ஞாயிற்றுக் கிழமை) காலையில் நமது மாவட்டத்தில் 20 மையங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வை 5,636 பேர் எழுதுகின்றனர்.

தேர்வுகளை கண்காணிக்க வீடியோ ஒளிப்பதிவாளருடன் முதன்மை கண்காணிப்பாளர், ஆய்வு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்குள் மின்னணு கருவிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது. தேர்வு தொடங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பாக தேர்வர்கள் மையத்திற்கு வந்துவிட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்தில் தேர்வு அறை ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துமீனாட்சி, அரசு பணியாளர் தேர்வாணைய பிரிவு அலுவலர் பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story