‘‘கொலையை விட கற்பழிப்பு குறைந்த குற்றமல்ல’’ ஐகோர்ட்டில் மாநில அரசு வாதம்


‘‘கொலையை விட கற்பழிப்பு குறைந்த குற்றமல்ல’’ ஐகோர்ட்டில் மாநில அரசு வாதம்
x
தினத்தந்தி 2 March 2019 12:21 AM GMT (Updated: 2 March 2019 12:21 AM GMT)

‘‘கொலையை விட கற்பழிப்பு குறைந்த குற்றமல்ல’’ என மும்பை ஐகோர்ட்டில் மாநில அரசு வாதிட்டு உள்ளது.

மும்பை, 

மும்பை சக்தி மில் வளாகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ந்தேதி பெண் புகைப்பட கலைஞர் 5 பேர் கும்பலால் கொடூரமான முறையில் கற்பழிக்கப்பட்டார். இதே கும்பல் இந்த சம்பவத்துக்கு முன் டெலிபோன் ஆபரேட்டர் ஒருவரையும் கொடூரமான முறையில் கற்பழித்து இருந்தது. 

எனவே இந்த செயலில் ஈடுபட்ட விஜய் ஜாதவ்(19), முகமது காசிம் சேக்(21), முகமது சலீம் அன்சாரி(28) ஆகிய 3 பேருக்கு மும்பை செசன்ஸ் கோர்ட்டு தூக்கு தண்டனை வழங்கியது.

இதை எதிர்த்து குற்றவாளிகள் 3 பேரும் மும்பை ஐகோர்ட்டில் முறையிட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவில் கொடூர கொலைகளுக்கு மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. கற்பழிப்பு குற்றங்களுக்கு தூக்கு என்பது பெரிய தண்டனை என வாதாடினர்.

இதை எதிர்த்து மாநில அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஆசுதோஷ் கும்பகோனி நீதிபதிகளின் முன் வாதாடுகையில், குற்றங்களின் தன்மையில் பல வேறுபாடுகள் உள்ளன. கற்பழிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் சாகவில்லை என்பதற்காக அதை கொலையைவிட குறைந்த குற்றம் என கருத முடியாது. 

கற்பழிப்பு, ஒரு பெண்ணின் உன்னதமான உரிமையை மீறும் அப்பட்டமான செயல். பெண் தன்மானத்துடன் வாழ சட்டம் உறுதி அளித்து இருக்கிறது. கற்பழிக்கப்படும் பெண் அந்த சம்பவத்திற்கு பிறகு நடைபிணமாகவே வாழ்கிறாள் என்று குறிப்பிட்டார்.

Next Story