ஏரியூர் அருகே விவசாயி மர்ம சாவு கொலையா? போலீசார் விசாரணை
ஏரியூர் அருகே விவசாயி மர்மமான முறையில் கட்டிலில் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியூர்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ஒட்டனூரை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 50). விவசாயி. இவருடைய மனைவி சின்னமணி. இவர்களுக்கு ஒரு மகள்இருக்கிறார். இவருக்கு திருமணமாகி விட்டது. மயில்சாமி மனைவியுடன் தோட்டத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி 2 பேரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். சின்னமணி வீட்டுக்குள்ளும், மயில்சாமி வீட்டுக்கு வெளியில் கட்டிலிலும் படுத்து இருந்தனர்.
இந்தநிலையில் நேற்று காலை சின்னமணி எழுந்து வந்த போது கணவர் மயில்சாமி கழுத்தில் காயத்துடன் மர்மமான முறையில் கட்டிலில் பிணமாக கிடந்தார். இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதுகுறித்து ஏரியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார், மயில்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர்பாபு வழக்குப்பதிவு செய்து முன்விரோதத்தில் மயில்சாமி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.
விவசாயி மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story