புலனாய்வு துறை எச்சரிக்கை: புதுவை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு பார்வையாளர்களுக்கு தடை


புலனாய்வு துறை எச்சரிக்கை: புதுவை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு பார்வையாளர்களுக்கு தடை
x
தினத்தந்தி 3 March 2019 10:00 PM GMT (Updated: 3 March 2019 7:54 PM GMT)

புலனாய்வு துறையின் எச்சரிக்கையையொட்டி புதுவை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புலவாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் இ முகமது இயக்க பயங்கரவாதிகளின் முகாம்களை இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி அழித்தன. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் பயங்கரவாதிகள் இந்திய விமான நிலையங்களில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய அரசுக்கு புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து புதுவை விமான நிலையத்தில் ‘ரெட் அலர்ட்’ பாதுகாப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமான நிலைய ஓடுதளத்தில் அடிக்கடி ரோந்து பணி மேற்கொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வாகனங்களை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே நிறுத்த அனுமதிக்கப்படுகிறது. அங்கும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

பயணிகள் யார் மீதாவது சந்தேகம் இருந்தால் அவர்களை போலீசார் தனியாக அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்துகின்றனர். முழு திருப்தி இருந்தால் மட்டுமே அவர்களை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கின்றனர்.

விமான நிலையத்தில் பயணிகளை வழியனுப்ப வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

புலனாய்வுத்துறை எச்சரிக்கை எதிரொலியாக புதுச்சேரி விமானநிலையத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் உள்பட பல இடங்களில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

பயணிகள் அல்வா, ஊறுகாய் மற்றும் திரவப்பொருட்களை கொண்டு வர அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story