நாமக்கல்லில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை


நாமக்கல்லில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 March 2019 11:15 PM GMT (Updated: 3 March 2019 8:19 PM GMT)

நாமக்கல்லில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை படசோலை கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் சிவரஞ்சனி(வயது 18). இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள என்.ஜி.ஓ.காலனியில் வாடகை வீடு ஒன்றை எடுத்து சக தோழிகளுடன் தங்கி படித்து வந்தார். இந்த வீட்டில் சிவரஞ்சனி உள்பட மொத்தம் 5 மாணவிகள் தங்கி இருந்தனர். நேற்று மாலை 2 மாணவிகள் வெளியில் சென்று விட்டனர். 2 மாணவிகள் ஒரு அறையிலும், சிவரஞ்சனி மற்றொரு அறையிலும் இருந்தனர்.

நீண்ட நேரம் ஆகியும் சிவரஞ்சனி இருந்த அறை திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த சக மாணவிகள் அவரது அறை கதவை தட்டி உள்ளனர். ஆனால் பதில் எதுவும் வரவில்லை. எனவே பக்கத்தில் வசிக்கும் நபரை அழைத்து வந்து அறையை திறந்து பார்த்து உள்ளனர். அப்போது சிவரஞ்சனி மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து சக மாணவிகள் இது குறித்து நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவி சிவரஞ்சனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story