தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு பார்வையாளர் மாடம் மூடப்பட்டது


தீவிரவாதிகள் மிரட்டல் எதிரொலி: விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு பார்வையாளர் மாடம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 3 March 2019 11:00 PM GMT (Updated: 3 March 2019 9:11 PM GMT)

தீவிரவாதிகள் மிரட்டலை தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. பார்வையாளர் மாடம் மூடப்பட்டு உள்ளது.

செம்பட்டு,

புலவாமாவில் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பதிலடியாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் நாட்டின் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக குண்டு வீசியது. இதில் புலவாமா தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்ற பயங்கரவாத இயக்கத்தின் முகாம்கள் அழிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம், முக்கிய விமானங்களை கடத்துவோம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்தனர்.

இந்த மிரட்டலை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற முக்கிய பெரு நகரங்களில் இயங்கி வரும் விமான நிலையங்கள் மட்டும் இன்றி இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில் திருச்சி விமான நிலையத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. திருச்சி விமான நிலைய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகிறார்கள். விமான பயணிகளையும் நன்றாக சோதனை செய்த பின்னரே உள்ளே செல்வதற்கு அனுமதித்து வருகிறார்கள்.

திருச்சி விமான நிலையத்தின் பார்வையாளர் மாடம் நேற்று முன்தினம் மாலை முதல் திடீர் என மூடப்பட்டு விட்டது. மறு அறிவிப்பு வரும் வரை பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர் மாடம் மூடப்பட்டே இருக்கும் என விமான நிலைய அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. 

Next Story