மானாமதுரையில் கபடி போட்டியில் தகராறு; 4 பேருக்கு அரிவாள் வெட்டு 10 பேர் மீது வழக்கு


மானாமதுரையில் கபடி போட்டியில் தகராறு; 4 பேருக்கு அரிவாள் வெட்டு 10 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 March 2019 10:33 PM GMT (Updated: 4 March 2019 10:33 PM GMT)

மானாமதுரையில் நடந்த கபடி போட்டியில் தகராறு ஏற்பட்டது. அதில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 10 மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர்.

மானாமதுரை,

மானாமதுரை கன்னார் தெருவைச் சேர்ந்தவர் மோகன் மகன் ஹரிகரசுதன் (வயது 20). மீன் வியாபாரியான இவர் கபடி போட்டியில் ஆர்வமுடையவர். இந்தநிலையில் கடந்த 23–ந் தேதி மானாமதுரையில் நடந்த கபடி போட்டியில் விளாக்குளம் அணியும், ஹரிகரசுதன் கலந்து கொண்ட அணியும் மோதின. அதில் ஹரிகரசுதன் அணி வெற்றி பெற்றது. இதேபோல நேற்றுமுன்தினம் நடந்த மற்றொரு கபடி போட்டியிலும் ஹரிகரசுதன் கலந்து கொண்ட அணி வெற்றி பெற்றது.

இதனால் ஆத்திரமடைந்த பில்லத்தி மணி, குட்டை சங்கர், புலிபாண்டி உள்பட சிலர் ஆயுதங்களுடன் சென்று, உறவினர் வீட்டில் இருந்த ஹரிகரசுதனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனராம். இதில் பலத்த காயமடைந்த ஹரிகரசுதன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து பில்லத்தி மணி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்தநிலையில் ஹரிகரசுதனின் உறவினரான அஜித்குமார் என்பவர் தனது நண்பர்களான மணிகண்டன், விஜய் ஆகியோருடன் சென்று, சம்பவம் பற்றி கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த தனராஜன், அவருடைய மகன் பாலமுருகன் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த 3 பேரும், தனராஜையும், பாலமுருகனையும் அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்த காரையும் அடித்து சேதப்படுத்தினராம். இந்த சம்பவத்தில் பாலமுருகன் திருப்பி தாக்கியதில் அஜித்குமாருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story