குடும்ப தகராறில் 3 மாத பெண் குழந்தையை தூக்கி வீசி கொன்ற கொடூர தாய் போலீசார் கைது செய்தனர்


குடும்ப தகராறில் 3 மாத பெண் குழந்தையை தூக்கி வீசி கொன்ற கொடூர தாய் போலீசார் கைது செய்தனர்
x
தினத்தந்தி 5 March 2019 11:15 PM GMT (Updated: 5 March 2019 6:39 PM GMT)

சீர்காழி அருகே குடும்ப தகராறில் தான் பத்து மாதம் சுமந்து பெற்ற தனது 3 மாத குழந்தையை தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்த சம்பவம் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சின்னங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகேந்திரன்(வயது 27). இவருடைய மனைவி வினோதா(22). இவர்களுக்கு திருமணம் முடிந்து 1½ வருடங்கள் ஆகிறது. கர்ப்பிணியாக இருந்த வினோதா பிரசவத்துக்காக சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டுக்கு வந்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சத்யஸ்ரீ என பெயரிடப்பட்டது.

பிரசவம் முடிந்ததும் கணவர் வீட்டுக்கு செல்லாமல் வினோதா தனது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார். இதை அவருடைய தாய் அம்புஜம் கண்டித்து வந்தார். கணவர் வீட்டுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வினோதாவிடம் அவருடைய தாய் அம்புஜம், குடும்ப செலவு அதிகரித்து வருவதால் மகளை அவரது கணவர் வீட்டுக்கு செல்லும்படி கூறி உள்ளார்.

அப்போது நடந்த தகராறில் ஆத்திரம் அடைந்த வினோதா, தான் பத்துமாதம் சுமந்து பெற்ற குழந்தை என்றும் பாராமல் தனது கையில் இருந்த குழந்தையை தூக்கி வீசினார். இதில் அந்த பச்சிளம் குழந்தை கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குழந்தை சத்யஸ்ரீயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து அம்புஜம், சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோதாவை கைது செய்தனர்.

குடும்ப தகராறில் தான் பெற்ற குழந்தையை தாயே தூக்கி வீசி கொன்ற விபரீத சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story