திருச்சி விமான நிலையத்தில் ரூ.6¾ லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் ரூ.6¾ லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 March 2019 10:45 PM GMT (Updated: 5 March 2019 7:30 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் ரூ.6¾ லட்சம் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல் மலேசிய பயணி சிக்கினார்.

செம்பட்டு,

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று முன்தினம் இரவு தனியார் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது மலேசிய நாட்டை சேர்ந்த பயணி சுரேஷ் முத்தமிழின் நடவடிக்கையில் சந்தேகமடைந்தனர். இதைத்தொடர்ந்து அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர் கழுத்தில் தங்க நகைகளை அணிந்து மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து 208 கிராம் எடை கொண்ட ரூ.6¾ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுரேஷ் முத்தமிழிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் திருச்சி விமானநிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் உள்பட தங்கம், எலக்ட்ரானிக் பொருட்கள் கடத்தி வந்த பயணிகள் பலர் சிக்கி கைதாகினர். அந்த சம்பவத்திற்கு பிறகு தங்கம் கடத்தி வரப்படுவது குறைந்திருந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக திருச்சி விமானநிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ளது. இதில் அதிகாரிகள் சோதனையில் சிலர் அவ்வப்போது சிக்கி வருகின்றனர். சி.பி.ஐ. அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் மீண்டும் ஒரு சோதனை நடத்தினால் தங்கம் கடத்தி வரப்படுவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story