ஆக்கிரமித்து கட்டப்பட்ட 4 கோவில்கள் இடித்து அகற்றம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு


ஆக்கிரமித்து கட்டப்பட்ட 4 கோவில்கள் இடித்து அகற்றம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 March 2019 11:00 PM GMT (Updated: 7 March 2019 9:10 PM GMT)

ஈரோடு கனிராவுத்தர் குளத்தின் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 4 கோவில்கள் இடித்து அகற்றப்பட்டன. அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு,

ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக ஆர்ப்பாட்டம், சாலை மறியல், உண்ணாவிரதம் உள்பட பல்வேறு கட்ட போராட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து கனிராவுத்தர் குளத்தின் கரைகளில் இருந்த வீடுகள், கடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டன.

அப்போது குளத்தின் கரையில் சத்தி ரோட்டோரமாக உள்ள 4 கோவில்கள் இடிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பில் உள்ள கோவில்களை பொதுமக்கள் தாங்களாகவே அகற்ற வேண்டும் என்றும், இல்லையென்றால் இடித்து அகற்றப்படும் என்றும் மாநகராட்சி சார்பில் நோட்டீசு வழங்கப்பட்டது.

கனிராவுத்தர் குளம் தனியார் நிதி பங்களிப்புடன் தூர்வாரப்பட்டது. ஆனால் பெரியசேமூர் பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் குளத்தில் கலந்து வருகிறது. இதைத்தடுக்க கரையோரமாக சாக்கடை கால்வாய் கட்டும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் ஆக்கிரமிப்பில் இருந்த கோவில்கள் உள்ள நிலத்தை தவிர மற்ற இடங்களில் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் குளத்தின் கரையோரமாக உள்ள கோவில்களை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை பொக்லைன் எந்திரத்துடன் அங்கு சென்றனர். இதையொட்டி அங்கு வீரப்பன்சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கோவில்களை இடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கோவிலை இடிக்க விடாமல், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கிருந்த போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் ஒருசிலர் தொடர்ந்து கலைந்து செல்லாமல் அங்கேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். ஆனாலும் பொதுமக்கள் சிலர் கலைந்து செல்லாததால், அவர்களை போலீசார் அங்கிருந்து குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் 4 கோவில்களும் இடித்து அகற்றப்பட்டன.

கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்ட பிறகு சேதமடைந்த சாமி சிலையையும், சிதறி கிடந்த கோவிலின் பொருட்களையும் பொதுமக்கள் தனியாக எடுத்து சென்றனர். மேலும், சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக அங்குள்ள ஒரு சில மரங்களும் அகற்றப்பட்டன.

Next Story