விராலிமலை அருகே, நிவாரண பொருட்கள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் - 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
விராலிமலை அருகே நிவாரண பொருட்கள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விராலிமலை,
விராலிமலை அருகே உள்ள கல்குடி கிராமத்தில் நேற்று, கஜா புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட் டது. அப்போது அப்பகுதி பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என்று கூறி விராலிமலை-இனாம்குளத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விராலிமலை போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை தொடர்ந்தனர்.
இதையடுத்து அங்கு வந்த விராலிமலை தாசில்தார் சதீஸ் சரவணக்குமார் மற்றும் இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகாமணி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story