உச்சிப்புளியில் தென்னந்தோப்பில் விவசாயி எரித்துக்கொலை போலீசார் தீவிர விசாரணை


உச்சிப்புளியில் தென்னந்தோப்பில் விவசாயி எரித்துக்கொலை போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 8 March 2019 11:07 PM GMT (Updated: 8 March 2019 11:07 PM GMT)

உச்சிப்புளியில் உள்ள தென்னந்தோப்பில் விவசாயி எரித்து கொலை செய்யப்பட்டுக்கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளி ரெயில்வே கேட் அருகே தென்னந்தோப்பு உள்ளது. இங்கு ராமநாதபுரம் அண்ணாநகரை சேர்ந்த விவசாயி முத்து (வயது58) தங்கியிருந்தார். இவருடைய மகன்கள் ராமநாதபுரத்தில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை முத்து உடலில் தீக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் உச்சிப்புளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது முத்துவின் உடல் தீக்காயங்களுடன் தலைகுப்புற கிடந்ததால் திட்டமிடப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, ராமேசுவரம் துணை சூப்பிரண்டு மகேஷ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிந்து அவர் சொத்து தகராறில் எரித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு காரணங்களுக்காக மர்ம நபர்கள் அவரை கொலை செய்தார்களா என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் உச்சிப்புளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story