“தே.மு.தி.க. எங்களுக்கு உதவி செய்ததாக கூறுவது ஏற்புடையதல்ல” தம்பிதுரை பேட்டி


“தே.மு.தி.க. எங்களுக்கு உதவி செய்ததாக கூறுவது ஏற்புடையதல்ல” தம்பிதுரை பேட்டி
x
தினத்தந்தி 9 March 2019 11:15 PM GMT (Updated: 9 March 2019 7:29 PM GMT)

தே.மு.தி.க. எங்களுக்கு உதவி செய்ததாக கூறுவது ஏற்புடையதல்ல என கரூரில் தம்பிதுரை கூறினார்.

கரூர்,

மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதற்காகவே அதிகாரிகளுடன் சென்று சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறோம். தேர்தல் தேதி அறிவிக்கப்படாததால், இதனை அரசியல் பிரசாரமாக பார்க்க வேண்டாம். அ.தி.மு.க. பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் தே.மு.தி.க. எங்களுக்கு உதவி செய்ததாக கூறுவது ஏற்புடையதல்ல. ஜெயலலிதா வழியில் மக்களுக்கான திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு சிறப்பாக செய்வதாக பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார். மேலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த எம்.ஜி.ஆரை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது என்றும், சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டுவதாக மோடி தெரிவித்து இருப்பது எங்களின் வலிமையையே காட்டுகிறது.

வருகிற சட்டசபை இடைத்தேர்தலில் 21 தொகுதியிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். இடைத்தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக தான் இருக்கிறோம். மாறாக எங்கள் மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சுமத்துகிற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. தேர்தல் நடைபெறாமல் இருக்க மு.க.ஸ்டாலின் தான் சதி திட்டம் தீட்டுகிறார். ரகசியங்களை வெளியிடுவது தி.மு.க.வின் வாடிக்கை.

இலங்கை போரின்போது, நாட்டின் பிரதமராக இருந்த சந்திரசேகருக்கு ஆதரவு அளித்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. அப்போது தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. இந்திய ராணுவ ரகசியங்களை இலங்கையிடம் பரிமாறியதால் தான் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. ரகசியத்தை காப்பாற்ற முடியாத கட்சி தி.மு.க. என்பதை மு.க.அழகிரியும் உறுதிப்படுத்தியுள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தை ரகசியத்தை காப்பாற்ற முடியாத இவர்களால், நாட்டை காப்பாற்ற முடியாது. தி.மு.க.-காங்கிரஸ் துரோக கூட்டணியை வீழ்த்துவதற்காக அ.தி.மு.க. தலைமையில் வெற்றி கூட்டணி அமைக்கப்பட்டிருக்கிறது.

2014 நாடாளுமன்ற தேர்தலில் 4 முனைபோட்டி இருந்தது. தற்போது இருமுனைப் போட்டி உள்ளதால் கூட்டணி அமைத்து இருக்கிறோம். எங்களது கூட்டணியில் பா.ஜ.க.வும் உள்ளதால் வரும் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story