சேனாபதி, செட்டித்திருக்கோணம் அரசு பள்ளிகளுக்கு கல்விச்சீர்


சேனாபதி, செட்டித்திருக்கோணம் அரசு பள்ளிகளுக்கு கல்விச்சீர்
x
தினத்தந்தி 9 March 2019 10:45 PM GMT (Updated: 9 March 2019 7:53 PM GMT)

சேனாபதி, செட்டித்திருக்கோணம் அரசு பள்ளிகளுக்கு கிராம மக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கப்பட்டது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தை சேர்ந்த சேனாபதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொதுமக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் விழா மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. இதற்கு வட்டார கல்வி அலுவலர் சாந்திராணி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவி பரிமளா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் பெஸ்கிதாசன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் விஜயலட்சுமி கலந்து கொண்டு பேசினர். இதில் ஊர் பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு தேவையான மின்விசிறிகள், நாற்காலிகள், குடங்கள், கெடிகாரங்கள் உள்பட ரூ.1 லட்சம் மதிப்பிலான பல்வேறு பொருட்களை பொதுமக்கள் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு சீராக கொடுத்தனர். அதனை தொடர்ந்து கல்வித்தரத்தை உயர்த்தும் வண்ணம் வகுப்பறைகளை “ஸ்மார்ட்“ வகுப்பாக அமைப்பதற்கு ஒரு வகுப்பறைக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 4 வகுப்பறைகளுக்கு ரூ.2 லட்சமூம், பள்ளி முழுவதும் சுண்ணாம்பு பூசி புதுப்பிக்க ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் நிதி உதவியாக பொதுமக்கள் சார்பில் பள்ளிக்கு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து பள்ளியின் ஆண்டு விழா நடந்தது. இதில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கும், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் வினோத்ராஜ், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் குமாரசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் வி.கைகாட்டி அருகே உள்ள செட்டித்திருக்கோணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு கிராம மக்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் விழா நடந்தது. இதில் பள்ளிக்கு தேவையான மேஜை, பீரோ, நாற்காலிகள், மின்விசிறி உள்பட ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை ஊர் பொதுமக்கள் சார்பில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. இதில் வட்டாரகல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை உமாதேவி வரவேற்றார். முடிவில் கணித ஆசிரியர் ரமேஷ் நன்றி கூறினார். 

Next Story