திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல்


திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.2 கோடி போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 9 March 2019 11:00 PM GMT (Updated: 9 March 2019 9:18 PM GMT)

திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.2½ கோடி மதிப்பிலான போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை கடத்த முயன்ற பயணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பட்டு,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, கொச்சி போன்ற இடங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அங்கிருந்தும் விமானங்கள் வந்து செல்கின்றன. திருச்சிக்கு வந்து செல்லும் விமான பயணிகள் சிலர் தங்கள் உடைமைக்குள் மறைத்து கடத்தி வரும் தங்கம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்து, பறிமுதல் செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர்.

அப்போது மன்னார்குடியைச் சேர்ந்த குழந்தைசாமியின் உடைமையில் சுமார் 10 கிலோ போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அந்த போதைப்பொருளை, அதிகாரிகள் சோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்தபோது “மெத்தகொலன்” என்ற போதைப்பொருள் என்பது தெரியவந்தது.

இந்த போதைப்பொருள் ஒரு கிலோ ரூ.25 லட்சம் இருக்கும் என்றும், இதனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 10 கிலோ போதைப்பொருளின் மதிப்பு ரூ.2 கோடியே 50 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குழந்தைசாமியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு போதைப்பொருளை கடத்த இருந்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story