‘தி.மு.க. அணியில் உள்ளவர்கள் கலைந்து அ.தி.மு.க. அணிக்கு வருவார்கள்’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி


‘தி.மு.க. அணியில் உள்ளவர்கள் கலைந்து அ.தி.மு.க. அணிக்கு வருவார்கள்’ அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 9 March 2019 11:00 PM GMT (Updated: 9 March 2019 10:19 PM GMT)

“தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்கள் கலைந்து அ.தி.மு.க. அணிக்கு வருவார்கள்” என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி சங்கரபாண்டியபுரம் சாலையில் ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ள மகளிர் சுகாதார வளாகத்திற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. சந்திரபிரபா ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.

பின்னர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது குறித்து முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் முடிவெடுப்பார்கள். தேர்தல் அறிவித்த பின் நல்ல முடிவு ஏற்படும். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் உள்ளவர்கள் கலைந்து, அ.தி.மு.க. அணிக்கு வருவார்கள். தி.மு.க. கூட்டணி, ஒரு ஒவ்வாத கூட்டணி. தமிழர்களுக்கு விரோதமான தி.மு.க. கூட்டணியை அடிமட்ட தொண்டர்கள் ரசிக்கவில்லை.

“கூடா நட்பு கேடாய் முடியும்” என காங்கிரசை பார்த்து கருணாநிதி கூறியிருக்கிறார். முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்கு காரணமான கட்சி காங்கிரஸ். அப்போது அந்த கட்சியுடன் தி.மு.க. கூட்டணியில் இருந்தது.

எனவே அந்தக் கட்சிகளுக்கு தமிழக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்தவர், வைகோ. இப்போது அவர்களது அணியில் சேர்ந்துள்ளார். அவரால் எப்படி தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story