நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டி - பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டி - பொதுக்குழு கூட்டத்தில் அறிவிப்பு
x
தினத்தந்தி 10 March 2019 11:01 PM GMT (Updated: 10 March 2019 11:01 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

வடலூர்,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்றது. இதற்கு மாநில நிர்வாக குழு தலைவர் திருமால்வளவன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் கனல் உ.கண்ணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே உடல் நலம் சரியில்லாத காரணத்தினால், கட்சியின் தலைவர் வேல்முருகன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இருப்பினும் செல்போன் மூலமாக அவர் பேசியது, கூட்டத்தில் ஒலிபரப்பப்பட்டது.

அப்போது அவர், உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் தன்னால் கூட்டத்திற்கு வர முடியவில்லை. விரைவில் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடுகிறது. ஒரு சீட்டுக்காக யாரிடமும் நான் விலை போக மாட்டேன். தொடர்ந்து தமிழர்களின் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுப்பேன் என்றார்.

கூட்டத்தில் தேர்தல் கமிட்டி தலைவர் ஜம்புலிங்கம், அமைப்பு செயலாளர் சின்னதுரை, மாநில இளைஞரணி அமைப்பாளர் ஜெரோன்குமார், நகர செயலாளர் அய்யப்பன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story