தட்சிண கன்னடா மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் சசிகாந்த் செந்தில் பேட்டி


தட்சிண கன்னடா மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் கலெக்டர் சசிகாந்த் செந்தில் பேட்டி
x
தினத்தந்தி 11 March 2019 10:00 PM GMT (Updated: 11 March 2019 10:12 PM GMT)

தட்சிண கன்னடா மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கலெக்டர் சசிகாந்த் செந்தில் தெரிவித்தார்.

மங்களூரு,

தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் சசிகாந்த் செந்தில் நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தட்சிண கன்னடா மாவட்டத்தில் புதிய வேட்பாளர்கள் வருகிற 19-ந்தேதி வரை தங்களது பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலை விட தற்போது 1,33,303 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். கடந்த ஜனவரி 1-ந்தேதி கணக்கின்படி மாவட்டத்தில் மொத்தம் 16,97,417 வாக்காளர்கள் உள்ளனர். தட்சிண கன்னடா மாவட்டத்தை பொறுத்தவரை 1,861 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் பொது இடங்களில் அரசியல் விளம்பரங்கள், பேனர்கள் வைக்கக்கூடாது. விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தட்சிண கன்னடா மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் கூறுகையில்,ட தட்சிண கன்னடா மாவட்டத்தில் மொத்தம் 46 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் கூறுகையில், மங்களூரு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரவுடிகளின் நடமாட்டம் குறைந்துள்ளது. தேர்தல் முடியும் வரை 3 ரவுடிகள் மங்களூரு நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. மங்களூரு மாநகர எல்லைப்பகுதிகளில் அமைதியான முறையில் தேர்தல் நடக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதேபோல, குடகு மாவட்ட தேர்தல் அதிகாரி லோகேஷ் நேற்று மடிகேரி கலெக்டர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், குடகு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 543 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும். எல்லைப்பகுதியில் கூடுதல் சோதனைச்சாவடி அமைத்து முறைகேடு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கப்படும் என்றார்.

Next Story