குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்


குறைதீர்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 March 2019 11:07 PM GMT (Updated: 11 March 2019 11:07 PM GMT)

திருவண்ணாமலையில் குறைதீர்வு நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெறும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. அதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வந்து உள்ளதால் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் நடைபெறும் மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம், விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம், மனுநீதி நாள் முகாம், அம்மா திட்ட முகாம் போன்ற அனைத்து அரசு சார்ந்த கூட்டங்களும் தேர்தல் நடத்தை விதிகள் நிறைவு பெறும் வரை நடைபெறாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை அறியாத பொரும்பாலான பொதுமக்கள் நேற்று மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். ஆனால் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெறவில்லை. பொதுமக்களிடம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நாடாளுமன்ற தேர்தல் முடியும் வரை மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெறாது என்றனர்.

மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மனு அளிக்க வரும் மக்களின் பயன்பாட்டிற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மனுக்கள் போடுவதற்காக பெட்டி ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.

மனு அளிக்க வந்த பொதுமக்கள் அந்த பெட்டியில் மனுக்களை செலுத்தினர். சிலர் கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுப்போம் என்று நின்றனர். அவர்களிடம் போலீசார் கலெக்டர் தற்போது மனுக்கள் பெற மாட்டார் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

கலெக்டரிடம் கோரிக்கை மனுக்கள் அளிக்க முடியாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story