தோட்டத்தில் பிணமாக கிடந்த தொழிலாளி அடித்து கொலையா? போலீசார் விசாரணை


தோட்டத்தில் பிணமாக கிடந்த தொழிலாளி அடித்து கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 March 2019 10:45 PM GMT (Updated: 12 March 2019 5:01 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் கூலித்தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது 40). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி வீரமணி (37). இவர்களுக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். கடன் தொல்லையால் அய்யனார் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் பிழைப்புக்காக, தனது மனைவியின் சொந்த ஊரான கொத்தப்பட்டியில் குடும்பத்துடன் குடியேறினார். கடந்த 2 மாதங்களாக அய்யனார் அங்கு வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் வேலைக்கு செல்வதாக கூறி அய்யனார் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் அவரை வீரமணி தேடினார்.

இந்தநிலையில் கொத்தப்பட்டி கிராமத்தின் தென்புறத்தில் உள்ள அங்குராசு என்பவரின் தோட்டத்தில் அய்யனார் பிணமாக கிடந்தார். இதனை கண்ட வீரமணி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர், ஒரு ஆட்டோவில் உடலை ஏற்றி கொத்தப்பட்டி சுடுகாட்டுக்கு கொண்டு சென்றார். மேலும் நேற்று காலை கொத்தப்பட்டி சுடுகாட்டில் உடலை வைத்து விட்டு இறுதிச்சடங்கு செய்வதற்காக பொருட்களை வாங்க ஊருக்கு சென்று விட்டார். இதற்கிடையே சுடுகாட்டில் அய்யனாரின் உடல் கிடப்பதை கண்டு ராஜதானி போலீஸ் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்தனர். இதேபோல் அய்யனாரின் உறவினர்களும் அங்கு திரண்டனர். அவருடைய உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அய்யனாரின் தலை மற்றும் கைகளில் காயங்கள் இருந்தன. இதனால் அவர், அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதேநேரத்தில், கடன்தொல்லையால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே அய்யனாரின் சாவு குறித்து அவருடைய மனைவி வீரமணியிடம் துருவி, துருவி விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story