மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஸ்ரீபிரியா தலைமையில் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு


மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஸ்ரீபிரியா தலைமையில் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு
x
தினத்தந்தி 12 March 2019 11:15 PM GMT (Updated: 12 March 2019 5:59 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஸ்ரீபிரியா தலைமையில் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் கட்சி அலுவலகத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. இதற்கு கட்சியின் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் நடிகை ஸ்ரீபிரியா தலைமை தாங்கினார். ஊர்வலம் கோவை ரோடு, காந்தி சிலை வழியாக சப்-கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.

பின்னர் வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமாரிடம், நடிகை ஸ்ரீபிரியா மனு கொடுத்தார். அதில், பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் வெளியாவதை தடுக்க வேண்டும். அடையாளங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது. அப்போது மாநில செயற்குழு உறுப்பினர்கள் கவிஞர் சினேகன், தங்கவேலு மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதை தொடர்ந்து நடிகை ஸ்ரீபிரியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யம் சார்பில் கொடுத்த மனுவினை ஆவணம் செய்வதாக தெரிவித்தனர். ஒரு பெண் நீதிபதியை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். அந்த பெண்ணின் வீடியோவை வெளியிட்டவர்கள் பெயரை கூட நான் சொல்ல விரும்பவில்லை. இந்த பிரச்சினையை அரசியலாக்க கூடாது என்பதற்காக தான் அமைதியான முறையில் ஊர்வலமாக மனு கொடுக்க வந்தோம். இதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டறிந்து தண்டிக்க ஒரு சிறப்பு விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story