ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியல் தேர்தலை புறக்கணிக்க முடிவு


ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியல் தேர்தலை புறக்கணிக்க முடிவு
x
தினத்தந்தி 12 March 2019 11:00 PM GMT (Updated: 12 March 2019 8:18 PM GMT)

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அனுமதி கிடைக்கவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறினர்.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள தான்றீஸ்வரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அனைத்து ஏற்பாடுகளும் செய்து இன்று (புதன்கிழமை) நடைபெற இருந்தது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. மேலும் தான்றீஸ்வரத்தை தொடர்ந்து கீழக்குறிச்சி, பெரியகுரும்பபட்டி, வீரப்பட்டி, நார்த்தாமலை உள்ளிட்ட பல இடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அந்தந்த கிராமத்தினர் அனுமதி பெற்றுள்ளனர். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறையை காரணம் காட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுத்துள்ளது. இது பல்வேறு கிராமத்தினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சாலை மறியல்

இந்நிலையில் இன்று நடைபெற இருந்த தான்றீஸ்வரம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுத்ததால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் புதுக்கோட்டை-விராலிமலை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தயார் நிலையில் இருந்தோம்

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே எங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு நடத்த முறைப்படி அனுமதி பெற்று போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, இன்று ஜல்லிக்கட்டு நடத்த அனைவரும் தயார் நிலையில் இருந்தோம். தங்கள் பகுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் இந்த போட்டியை காண ஆவலுடன் ஊர் திரும்பி உள்ளனர். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள பல்வேறு இடங்களிலிருந்து காளைகளும் வர தொடங்கிவிட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.10 ஆயிரம் முதல் செலவழித்துள்ளனர். இந்நிலையில் போட்டி நாளை (இன்று) நடக்க இருந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் தேர்தல் நடத்தை விதியை காரணம் காட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடைவிதித்துள்ளது

தேர்தலை புறக்கணிப்போம்

இதனால் நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். முன்கூட்டியே இதை சொல்லி இருந்தால், பொருள் செலவும், பணம் செலவும் வீணாகி போயிருக்காது. ஊரே ஒன்று கூடி திருவிழாவை போல் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தற்போது மாவட்ட நிர்வாகம் தேர்தலை காரணம் காட்டி தடை விதித்துள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த ஜல்லிக்கட்டை குறிப்பிட்டபடி நடத்த அனுமதி வழங்க வேண்டும். இல்லை என்றால் தங்கள் பகுதி மக்கள் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணிப்போம் என்று கூறினர்.

Next Story