எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடக்கம்: 21,927 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் மாவட்டத்தில் 90 மையங்கள் தயார்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடக்கம்: 21,927 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் மாவட்டத்தில் 90 மையங்கள் தயார்
x
தினத்தந்தி 12 March 2019 11:48 PM GMT (Updated: 12 March 2019 11:48 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் நாளை தொடங்க உள்ள எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 21 ஆயிரத்து 927 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 90 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நாளை (வியாழக் கிழமை) தமிழகம் முழுவதும் தொடங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 309 பள்ளிகளை சேர்ந்த 11,574 மாணவர்களும், 10,353 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 927 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத உள்ளனர். இதேபோல் தனித்தேர்வர்கள் 605 பேரும் இத்தேர்வை எழுத விண்ணப்பித்து உள்ளனர்.

இதற்காக மாவட்டம் முழுவதும் 90 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் உள்பட 10 இடங்களில் வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்கள் கண்காணிப்பு கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை கண்காணிக்க மாவட்டத்தில் 90 முதன்மை கண்காணிப்பாளர்களும், 90 துறை அலுவலர்களும், 252 நிரந்தர பறக்கும் படையினரும், 1,260 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story