திருக்கடையூரில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்


திருக்கடையூரில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 March 2019 11:00 PM GMT (Updated: 13 March 2019 7:04 PM GMT)

திருக்கடையூரில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கடையூர்,

நாகை மாவட்டம் திருக்கடையூர் பகுதிகளில் உள்ள திருக்கடையூர், காழியப்பநல்லூர், பிள்ளைபெருமாள்நல்லூர், கிள்ளியூர், மாணிக்கபங்கு, மருதம்பள்ளம், டி.மணல்மேடு ஆகிய 7 ஊராட்சிகளில் இருந்து பயிர்க்காப்பீட்டு தொகை 2017-2018-ம் ஆண்டிற்கு 1,875 பேர் செலுத்தினர். இதில் 1,182 விவசாயிகளுக்கு மட்டும் காப்பீட்டு தொகை திருக்கடையூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு வந்துள்ளது. மீதமுள்ள 693 பேருக்கு காப்பீட்டு தொகை வரவில்லை.

இந்தநிலையில் பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சியை சேர்ந்த விவசாயிகள் 344 பேர் பயிர்க்காப்பீட்டு தொகை செலுத்தியுள்ளனர். இதில் 171 விவசாயிகளுக்கு மட்டும் பயிர்க்காப்பீட்டு தொகை வந்துள்ளது. மீதமுள்ள 173 விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகை வராததால் நேற்று விவசாயிகள், திருக்கடையூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், தரங்கம்பாடி தாசில்தார் சுந்தரம், திருக்கடையூர் கிராம நிர்வாக அலுவலர் கவி நிலவன் ஆகியோர் விரைந்து வந்து, திருக்கடையூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ரவிசந்திரன் முன்னிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மீதமுள்ள விவசாயிகளுக்கு அதிகாரிகளிடம் பேசி பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

இதில் பிள்ளைபெருமாள்நல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரவடிவேல், பிள்ளைபெருமாள்நல்லூர் விவசாயிகள் தமிழ்வாசகம், முருகானந்தம், கனகராஜ், ராதா, ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story