திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு


திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 13 March 2019 11:00 PM GMT (Updated: 13 March 2019 8:55 PM GMT)

திருச்சி நாடாளுமன்ற தொகுதி, வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

திருச்சி,

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி வருகிற 19-ந் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23-ந் தேதி நடக்கிறது. திருச்சி மாவட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சிவராசு தலைமையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடிகளில் உள்ள வசதி, பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கண்காணிப்பு கேமரா பொருத்துவது மற்றும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுவது குறித்து ஏற்கனவே அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் என மொத்தம் 6 தொகுதிகள் அடங்குகிறது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி மாலை முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டு சட்டமன்ற தொகுதிவாரியாக வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்லப்படும். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமாக பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சிவராசு தேர்வு செய்தார். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போதும் இதே கல்லூரியில் வைத்துதான் வாக்குகள் எண்ணப்பட்டன. எனவே, சாரநாதன் கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக எப்படி எடுத்து செல்வது என்றும், அங்கு 3 அடுக்கு போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது குறித்தும் கலெக்டர் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கலெக்டர் சிவராசு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் சென்றார். அங்கு, வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்ட பின்னர், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர்கள் நிஷா, மயில்வாகனன், ஸ்ரீரங்கம் சப்-கலெக்டர் சிபி.ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி முதன்மை பொறியாளர் அமுதவல்லி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக எந்த அறையில் வைப்பது? என்றும், அங்கிருந்து வாக்கு எண்ணும் இடத்திற்கு கொண்டு செல்ல தடுப்பு ஏற்படுத்தி ஒருவழிப்பாதையாக மாற்றுவது குறித்தும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. 

Next Story