பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கேட்டு - விழுப்புரம் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நீதி கேட்டு விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம்,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், இதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவது கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட மாணவிகள், இளம்பெண்களுக்கு நீதி கேட்டு நேற்று விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், பொள்ளாச்சி சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கூறி முழக்கங்களை எழுப்பினர். முறையான விசாரணை நடத்தி குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவருக்கும் கடும் தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அங்கு பிரச்சனைகள் ஏற்படாமலிருக்க கல்லூரி வாசல் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். பிற்பகல் வரை இப்போராட்டம் நடந்தது. பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story