எட்டயபுரம் அருகே வைப்பாற்று படுகையில் பா.ம.க.- தே.மு.தி.க.வினர் முற்றுகை


எட்டயபுரம் அருகே வைப்பாற்று படுகையில் பா.ம.க.- தே.மு.தி.க.வினர் முற்றுகை
x
தினத்தந்தி 13 March 2019 10:30 PM GMT (Updated: 13 March 2019 11:12 PM GMT)

எட்டயபுரம் அருகே வைப்பாற்று படுகையில் மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி, பா.ம.க.-தே.மு.தி.க.வினர் முற்றுகையிட்டனர்.

எட்டயபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கீழ்நாட்டுகுறிச்சி வைப்பாற்று படுகையில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் சவுடு மண் எடுப்பதற்கு அனுமதி பெற்று விட்டு, முறைகேடாக இரவு நேரங்களில் ஆற்று மணலை லாரிகளில் கடத்திச் செல்வதாக கூறப்படுகிறது.

எனவே மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். வைப்பாற்று படுகையில் முறைகேடாக செயல்படும் மணல் குவாரியை மூட வேண்டும் என்று வலியுறுத்தி, பா.ம.க., தே.மு.தி.க.வினர் நேற்று கீழ்நாட்டுகுறிச்சி வைப்பாற்று படுகையில் தனியார் நிலத்தில் மண் அள்ளும் இடத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

பா.ம.க. மாநில துணை பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சின்னத்துரை, வினோத்குமார், பரமகுரு, மாவட்ட தலைவர்கள் ஜெபகுமார், சிவபெருமான், நள்ளி கருப்பசாமி, மாநில துணை அமைப்பு தலைவர் கருப்பசாமி, மாநில துணை அமைப்பு செயலாளர் முருகன், நகர செயலாளர் காளிதாஸ், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வக்கீல் அழகர்சாமி, மாநில மகளிர் அணி செயலாளர் சிவபிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். 

Next Story