‘டிக்டாக்’ வீடியோ மூலம் மலர்ந்த காதல் காதலன் வீட்டிற்கு ஓடி வந்த இளம்பெண் பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்


‘டிக்டாக்’ வீடியோ மூலம் மலர்ந்த காதல் காதலன் வீட்டிற்கு ஓடி வந்த இளம்பெண் பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்
x
தினத்தந்தி 15 March 2019 12:00 AM GMT (Updated: 14 March 2019 7:14 PM GMT)

‘டிக்டாக்’ வீடியோ மூலம் காதல் மலர்ந்ததால் இளம்பெண் காதலன் வீட்டுக்கு ஓடி வந்தார். அவருக்கு போலீசார் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கடமடை கிராமத்தை சேர்ந்த 27 வயது வாலிபர் சிவில் என்ஜினீயரிங் முடித்துள்ளார். இவர் செல்போனில் ‘டிக்டாக்’ வீடியோ பதிவு செய்து, அதை முகநூலில் (பேஸ்புக்) வெளியிட்டு வந்துள்ளார். இதை திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த பிளஸ்-1 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்த 17 வயது இளம்பெண் பார்த்துள்ளார். மேலும், இவர்கள் 2 பேரும் பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமானார். இதுகுறித்து பெண்ணின் தாயார் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இளம்பெண், தர்மபுரி வாலிபருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து பெண்ணின் பெற்றோர் தர்மபுரி மாவட்டம் கடமடை கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தனர். அப்போது காதலன் வீட்டிற்கு இளம்பெண் ஓடி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க பாலக்கோடு போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவிட்டார். இதனால் அந்த வாலிபர் திடீரென தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து போலீசார், இளம்பெண் மற்றும் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்ணின் பெற்றோர், வாலிபர் தனது மகளை காரில் கடத்தி வந்ததாகவும், மகளுக்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் தங்களுடன் அனுப்பி வைக்குமாறும் போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் இளம்பெண் பெற்றோருடன் செல்ல மறுத்து காதலனுடன் செல்வதாகவும், தன்னை காதலன் கடத்தி வரவில்லை, தானாக வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து போலீசார், வாலிபரின் பெற்றோரிடம் இளம்பெண் திருமண வயதை அடையவில்லை என்றும், அவரை பெற்றோருடன் அனுப்பி வைக்குமாறும் தெரிவித்தனர். போலீசாரின் அறிவுரையை தொடர்ந்து அந்த பெண் தனது பெற்றோருடன் செல்வதாக தெரிவித்தார். இதையடுத்து பாலக்கோடு போலீசார் இளம்பெண்ணை அவருடைய பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Next Story