கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 12,368 பேர் எழுதினர்


கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 12,368 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 7:43 PM GMT)

கரூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 12,368 பேர் எழுதினர்.

கரூர்,

தமிழகம் முழுவதும் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் தேர்வுக்காக 53 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. காலையில் பிளஸ்-1, பிளஸ்-2-க்கு தேர்வு நடந்து வருவதால் எஸ்.எஸ்.எல்.சி. மொழிபாட தேர்வுகள் மதியம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதனால் மதியம் 12 மணிக்கு மேல் தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கிய மாணவ, மாணவிகள் ஆங்காங்கே வளாகத்தில் அமர்ந்து படித்ததை கடைசியாக திருப்பி பார்த்து கொண்டிருந்தனர்.

பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் தேர்வு எழுத செல்லும் மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்களை பரிசாக வழங்கி வாழ்த்தியதை காண முடிந்தது. மதியம் 1.30 மணியளவில் மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து ஆலோசனை வழங்கப்பட்டது. அப்போது, தேர்வறையில் துண்டு சீட்டு வைத்திருத்தல், செல்போன் பயன்படுத்துதல், வினாத்தாள்-விடைத்தாள் மாற்றம் செய்தல், ஆள் மாறாட்டத்தில் ஈடுபடுதல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் படிப்பதற்கு தடை உள்ளிட்ட நடவடிக்கை கள் எடுக்கப்படும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும் தேர்வு சம்பந்தமான புகார்களை தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு மையத்திலும் புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சரியாக மதியம் 2 மணியளவில் தேர்வறைக்குள் அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளுக்கு வினாத்தாள், விடைத்தாள் வழங்கப்பட்டது. சுமார் 15 நிமிடம் வினாத்தாளை படிப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. பின்னர் 2.15 மணியளவில் ஆர்வத்துடன் மாணவர்கள், எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல் தாள் தேர்வெழுத ஆரம்பித்தனர். தேர்வு தொடங்கியதும், மையத்தினுள்ளே வெளிநபர்கள் யாரும் புகுந்து விடாத வகையில், நுழைவு வாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கரூர் சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு, தேர்வு குறித்த நேரத்தில் தொடங்கி விட்டதா? என்பன உள்ளிட்டவை குறித்து தேர்வு மைய கண்காணிப்பாளர்களிடம் கேட்டறிந்தார். இதே போல் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தங்கவேல் உள்பட கல்வி அதிகாரிகளும் தேர்வு மையங்களுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, வருகை பதிவு குறித்து கேட்டறிந்தனர். கரூர் மாவட்டத்தில் 6,534 மாணவர்கள், 6,169 மாணவிகள் என மொத்தம் 12,703 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 335 பேர் தேர்வு எழுத வராததால், 12,368 பேர் தேர்வு எழுதினர்.

தேர்வில் முறைகேடுகளை களைவதற்காக 60 பறக்கும் படை குழுவினர் நியமிக்கப்பட்டு, அவர்கள் திடீரென தேர்வறைக்கு வருகை புரிந்து மாணவர்களின் செயல்பாடுகளை கண்காணித்தனர். தேர்வு பணிக்காக கரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,102 ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். தேர்வானது சரியாக 4.45 மணியளவில் நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து விடைத்தாளை தேர்வறை கண்காணிப்பாளரிடம் மாணவர்கள் ஒப்படைத்து விட்டு வெளியே வந்தனர்.

பின்னர் தேர்வில் தங்களுக்கு எழுந்த சந்தேகங்கள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். எஸ்.எஸ்.எல்.சி.க்கு மட்டும் மொழிபாடத்தில் 2 தாள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் தமிழ் முதல் தாள் தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்தனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணிநேரம் அளிக்கப்பட்டு இருந்தது. அனைத்து தேர்வு மையங்களிலும், தேர்வெழுத வரும் மாணவ-மாணவிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்களுக்கு எளிதில் வந்துசெல்ல போதிய பஸ்வசதி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

Next Story