இரவு, பகலாக வாகன சோதனை: ரூ.6 லட்சத்து 43 ஆயிரம்-கார் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை


இரவு, பகலாக வாகன சோதனை: ரூ.6 லட்சத்து 43 ஆயிரம்-கார் பறிமுதல் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 14 March 2019 11:00 PM GMT (Updated: 14 March 2019 8:35 PM GMT)

திருவாரூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு, பகலாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்றுமுன்தினம் நள்ளிரவில் நடந்த வாகன சோதனையின்போது ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

கொரடாச்சேரி,

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் களுக்கு கொடுப்பதற்காக பணம், பரிசு பொருட்கள் எடுத்து செல்லப்படுகிறதா? என்பதை கண்டறிய பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் இரவு, பகலாக வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். திருவாரூர் வேளாண்மை உதவி இயக்குனர் உத்திராபதி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் கொரடாச்சேரி அருகே முகந்தனூர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் காரில் வந்தவர் தஞ்சையை சேர்ந்த ரபேல் என்பதும், காரில் ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 500 ஆயிரத்தை எடுத்து செல்வதும் தெரிய வந்தது.

பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 500-ஐ பறிமுதல் செய்து, திருவாரூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். இந்த பணத்துக்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும், பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பணம் கொண்டு வரப்பட்ட கார் பறிமுதல் செய்யப்படவில்லை என்றும் பறக்கும் படை அதிகாரிகள் கூறினர்.

அதேபோல மன்னார்குடி அருகே உள்ள உள்ளிக்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் வட்டார வளர்ச்சி அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கும்பகோணத்தில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது.

அந்த காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி சுமார் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் எடுத்து செல்வது தெரிய வந்தது.

இதுகுறித்து காரில் வந்த கோகுல்ராம், நரேந்திரசிங் ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் பட்டுக்கோட்டையில் மோட்டார் வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடை வைத்திருப்பதாகவும், வெளியூர் கடைகளில் இருந்து பணம் வசூல் செய்துவிட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

ஆனால் உரிய ஆவணங்களை அவர்கள் காட்டாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். பணம் கொண்டு வரப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே திருவாரூர் அருகே வாகன சோதனையில் ரூ.50 லட்சம் சிக்கியது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2 இடங்களில் மொத்தம் ரூ.6 லட்சத்து 43 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதனால் திருவாரூரில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Next Story