வீரப்பூர் மாசி பெருந்திருவிழாவில் பெரியகாண்டியம்மன் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்


வீரப்பூர் மாசி பெருந்திருவிழாவில் பெரியகாண்டியம்மன் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
x
தினத்தந்தி 14 March 2019 10:30 PM GMT (Updated: 14 March 2019 9:34 PM GMT)

வீரப்பூர் மாசி பெருந் திருவிழாவில் பெரிய காண்டியம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் மாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரியகாண்டியம்மன் தேரோட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. முன்னதாக வீரப்பூர் ஜமீன்தார்களும், கன்னிமாரம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர்களுமான சுதாகர் என்கிற சிவசுப்ரமணிய ரெங்கராஜா, ஆர்.பொன்னழகேசன், சவுந்தரபாண்டியன், அசோக்பாண்டி, சுரேந்திரன் மற்றும் பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை பூசாரிகள் பெரிய பூசாரி மு.செல்வம், குதிரை பூசாரி மாரியப்பன், சின்னபூசாரி கிட்டு என்கிற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை, பரம்பரை அர்ச்சகர் ரமேஷ் என்கிற வெ.ரெங்கசாமி அய்யர் ஆகியோர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி அலங்கரிக்கப்பட்ட பெரியகாண்டியம்மனை வீரப்பூர் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட தேரில் கொண்டு வந்து வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

அதைத்தொடர்ந்து சாம்புவன் காளை முரசு கொட்டி முன் செல்ல மதியம் 12.45 மணிக்கு தேர் புறப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மதியம் 1.45 மணியளவில் தேர் நிலையை வந்தடைந்தது. தேர் சென்ற இடங்களில், விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த தானியங்களையும், பக்தர்கள் மலர் மாலைகளையும் அம்மனுக்கு செலுத்தி வழிபட்டனர். தேரோட்ட நிகழ்ச்சிகளை நாடக்காப்பட்டி அரசு பள்ளி ஆசிரியர் விடவை வெ.நல்லுசாமி தொகுத்து வழங்கினார்.

இன்று(வெள்ளிக்கிழமை) மாலை வீரப்பூரில் சத்தாவர்ணம் என்ற மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. தேரோட்டத்தையொட்டி மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு சர்மு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மணப்பாறை தாசில்தார் சித்ரா மற்றும் வருவாய்த்துறையினர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். 

Next Story