தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 33,477 மாணவ-மாணவிகள் எழுதினர்


தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 33,477 மாணவ-மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 14 March 2019 11:00 PM GMT (Updated: 14 March 2019 9:49 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 33,477 மாணவ-மாணவிகள் எழுதினர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தஞ்சை மாவட்டத்தில் 126 தேர்வு மையங்களில் 16 ஆயிரத்து 668 மாணவர்களும், 16 ஆயிரத்து 809 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 477 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இவர்களில் 146 பேர் மாற்றுத்திறனாளி ஆவர். மாணவர்கள் தேர்வு எழுதுவதை கண்காணிக்க தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அலுவலக பணியாளர்கள் என 2,739 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைதளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன. உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாதோர், வாய்பேச முடியாதவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு கூடுதலாக 50 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்கள் சொல்வதை எழுதுவதற்காக சிறப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

கலெக்டர் ஆய்வு

தேர்வு மையங்களில் மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்கவும் 272 பறக்கும்படை உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.

தஞ்சையை அடுத்த வல்லம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று அங்கு மாணவிகள், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

முன்னதாக தேர்வு எழுத சென்ற மாணவ, மாணவிகள் கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் பலர் பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் ஆசி பெற்றுவிட்டு தேர்வு எழுத சென்றனர்.


Next Story